தமிழ்நாடு
சாதுக்களும் சாமியார்களும்: பாஜகவை வெளுத்துவாங்கிய தயாநிதிமாறன்

சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற கலைஞரின் நினைவஞ்சலி கூட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் இப்போது சாதுக்களும், சாமியார்களும் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஜெய் ஸ்ரீராம், மோடி மட்டுமே அதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தாலும் ஹிந்தியில்தான் பேசுகிறார்கள். அதை பார்த்து மனம் தாங்காமல் தான் நாங்கள் தமிழ் முழக்கம் எழுப்பினோம்.
காஷ்மீர் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலும் தவறாக பயன்படுத்தி உள்ளனர். காஷ்மீர் அரசியல் தலைவர்களை ஏன் வீட்டுக் காவலில் வைத்துள்ளீர்கள்? சொந்த ஊரில் வீடு வாங்க முடியாதவர்கள் எப்படி காஷ்மீரில் வீடு வாங்குவார்கள். யாரை ஏமாற்றுகிறார்கள்? நமக்கு ஓட்டே போடாத மார்வாடிகள் போன் செய்து இந்தியாவிற்கு எதிராக பேசாதீர்கள் என்கிறார்கள்.
இன்று கஷ்மீருக்கு நடந்தது நாளை ஏன் தமிழகத்திற்கு நடக்காது? தமிழகத்தையும் வன்னியர் நாடு, கவுண்டர் நாடு என்று பலவாறாக பிரிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். காஷ்மீரில் எமர்ஜென்சி தானே இருக்கிறது. துக்ளக் தர்பார் ஆட்சி தானே இங்கே நடக்கிறது என்று பாஜகவை வெளுத்து வாங்கினார் தயாநிதி மாறன்.

















