தமிழ்நாடு
லஞ்சம் வாங்கினால் தூக்கிலிட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி!
லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களது மொத்த சொத்தையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அதிரடி கருத்துக்களை தெரிவித்தனர்.
மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக பரணிபாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்தனர்.
அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது. சிசிடிவி, கேமரா, செல்போன் பயன்பாடுகளால் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வெளிச்சத்துக்கு வருகின்றன. இந்த லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டுமானால் லஞ்சம் வாங்குவோரைத் தூக்கில் போட வேண்டும்.
இல்லையென்றால் அவர்களின் மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இது போன்ற கடுமையான தண்டனை வழங்கினால்தான் லஞ்சம் வாங்கும் பழக்கம் ஒழியும் என நீதிபதிகள் அதிரடியாக கூறினர்.