தமிழ்நாடு
சென்னை இளம்பெண் தற்கொலை: மாமனாரின் டார்ச்சர் காரணம் என புகார்!
சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாமனாரின் டார்ச்சர் காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த லாவண்யா என்பவருக்கும் சேலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் வெங்கடேஷுக்கு வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதல்வர் பணி கிடைத்ததை அடுத்து இருவரும் வண்டலூரில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் திடீரென லாவண்யா தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து லாவண்யாவின் தாயார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் ’தனது மகளை வெங்கடேஷ் சரியாக குடும்பம் நடத்தாமல் அவ்வப்போது தங்களது வீட்டில் விட்டு விடுவார் என்றும், அதன் பிறகு சமாதானம் பேசி அழைத்து செல்வார் என்றும் கூறியுள்ளார். அதேபோல் சமீபத்தில் அவர் சமாதானம் பேசி தனது மகளை அழைத்துச் சென்ற போது, மகள் லாவண்யாவிடம் அவரது மாமனார் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து எனது மகள் என்னிடம் அழுதுகொண்டே கூறியது பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் எனது மகள் தற்கொலை செய்துகொண்டார் என்று எனக்கு தகவல் வந்தது என்றும் , ந்ன் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும் அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றும் அதனால் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.