தமிழ்நாடு
4 மாவட்டங்களில் இன்று கனமழை: இனி வெயில் தணியுமா?
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று இன்னும் சில மணி நேரங்களில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் மற்ற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்றும் அதனால் அந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.