தமிழ்நாடு
நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம்: சென்னை கோயம்பேட்டில் மக்கள் அவதி!
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னையில் 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது இவற்றில் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். ஆகிய தொழிற்சங்கங்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக பேருந்துகள் மிகவும் குறைந்த அளவே இயங்குகிறது என்றும் குறிப்பாக சென்னையில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வதற்காக கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் இதனால் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மட்டுமின்றி மதுரை, விழுப்புரம், விருதுநகர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களிலும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
பேருந்துகள் இயங்காத காரணத்தால் ஆட்டோக்களில் கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் நாளையும் தொடரும் என்பதால் நாளையும் பொதுமக்கள் அவதி பட வேண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.