இந்தியா
‘பாஜக 20ல ஒண்ணுல கூட ஜெயிக்காது..!’- சொல்கிறார் பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி

எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அஇஅதிமுக, தான் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்தான பட்டியலையும் தனது கூட்டணிக் கட்சிகள் போட்டியிட உள்ள பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இப்படியான சூழலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, ‘ஒரு அகில இந்திய கட்சி, மாநிலக் கட்சியிடம் பிச்சை வாங்கி இப்படி சில தொகுதிகளில் நிற்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இப்படி நின்றாலும் 2, 3 தொகுதிகளில் தான் பாஜக வெற்றி பெறும். ஒன்றில் கூட வெற்றி பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது. வெற்றியோ, தோல்வியோ அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.



















