தமிழ்நாடு
மீண்டும் மக்கள் நல பணியாளர்களுக்கு வேலை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்!
மக்கள் நலப்பணியாளர்கள் வேலையை இழந்த 13 ஆயிரம் பேர்களுக்கு மீண்டும் வேலை வழங்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது .
கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் வேலையை அன்றைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக, மக்கள் நல பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது. அதன்பின் திமுக அதிமுக ஆட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தபோது மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்படுவதும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவதுமக இருந்தன.
கடைசியாக 2011ம் ஆண்டில் மக்கள் நலப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்ட நிலையில் மக்கள் நலப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, ‘மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கொள்கை முடிவை எடுத்திருப்பதாகவும் எனவே இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் 4 வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் மக்கள் நல பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.