இந்தியா
பூமியின் தோழி நிலா நம்மை விட்டு போய் விடுவாளா? அப்புறம் ஜோதிடம், ஜாதகம் என்னாகும்?

பூமியின் தோழி நிலா நம்மை விட்டு போகப் போவதாக சில நாள்களாக இணையத்தை கலக்கி வரும் செய்தியைத்தான் இப்போது நாம் அலசப் போகிறோம்…
அணைத்து இந்து கோயில்களிலும் உள்ள நவக்கிரகங்கள் இனி என்னாகும்? நிலா அதாவது சந்திரனை மையமாக வைத்து ராசி, ஜாதகம், ஜோதிடம் என்று பிழைத்துக் கொண்டிருக்கும் ஜோதிடர்கள் இனி என்னாவார்கள்?
அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி மூலம் ‘2024 YR4’ எனும் விண்கல்லை, தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விண்கல் பயணிக்கும் பாதைக்கு குறுக்கே பூமி வரும் போது இந்த விண்கல் பூமி மீது மோதும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருந்தாலும் இக்கல் நிலவு மீது மோத வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
தொடக்கத்தில் 3.8% மட்டுமே வாய்ப்புகள் இருந்த நிலை மாறி இப்போது இது 4.3% ஆக அதிகரித்திருக்கிறது. இருந்தாலும் இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, இந்த கல் மோதினாலும், நிலவு அதன் சுற்றுவட்டப்பாதை பாதையிலிருந்து விலகாது என்பதுதான். ஆனால் அதுவுமே கூட 100% உறுதியாக சொல்லிவிட முடியாது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், “ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ‘Near-Infrared Camera’ மூலம் நடைபெற்ற ஆய்வில் புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அதன்படி நிலவை இக்கல் 2032ம் ஆண்டு தாக்கலாம். முதன் முதலில் இக்கல் 2024 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக பூமிக்கு 70 லட்சம் கி.மீ நெருக்கத்தில் வரும் விண்கற்கள் ஆபத்தானவையாகும். அந்த வகையில் இந்த விண்கல்லும் ஆபத்தானதுதான்.
நிலவுடன் ஒப்பிடும்போது இக்கல், மிகவும் எடை குறைந்தது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளனர். ஆனால் சில தனியார் விண்வெளி ஆய்வாளர்கள், இக்கல் நிலவு மீது மோதும்போது நிலவு பூமியை விட்டு மேலும் விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
நிலாவினால்தான் நாம் இரவு நேரத்திலும் வெளிச்சத்தை பார்க்க முடிகிறது. மேலும் நிலவின் ஒளி மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. இந்த நிலாவினால்தான் பல கவிஞர்கள் இன்று நம்மிடையே கவிதைகள் எழுதி நம்மை மகிழ்வித்து வருகின்றனர். அது மட்டுமா? காதலர்களுக்கு நிலாவின் ஒளி மிகுந்த ஈர்ப்பையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
மேலும் இந்த சந்திரனை மையமாக வைத்து பல புராணக் கதைகள் இந்து மதத்தில் மட்டுமல்ல உலகிலுள்ள பல்வேறு மதங்களிலும் வழங்கி வருகின்றன. மேலும் இந்த சந்திரனை மையமாக வைத்தே ஜோதிடர்களின் பிழைப்பும் நடந்து வருகிறது. இவற்றிற்கெல்லாம் ஆப்பு வைக்கப் போகிறதா இந்த விண்கல்?
நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகள் உருவாகின்றன. நிலவு இல்லையெனில், சூரியனின் ஈர்ப்பு மட்டுமே அலைகளை உருவாக்கும், இதனால் அலைகள் மிகவும் பலவீனமாகவும் ஒழுங்கற்றதாகவும் இருக்கும். கடலில் அலை வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் அதைவிட பெரிய பாதிப்புகள் எல்லாம் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
நிலவு பூமியின் சுழற்சி அச்சை நிலைப்படுத்த உதவுகிறது. இல்லாவிட்டால், பூமியின் அச்சு பெரிய அளவில் பாதிக்கப்படும். இது காலநிலையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி பருவ காலங்களிலும் நிறைய கோளாறுகள் ஏற்பட்டு விடும்.. நிலவு இரவில் இயற்கையான வெளிச்சத்தை வழங்குகிறது. இல்லையெனில், இரவுகள் மிகவும் இருண்டதாக இருக்கும், இது விலங்குகள் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும். உதாரணத்திற்கு கடற்கரை மணற் பரப்பிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் நிலவின் வெளிச்சத்தை அடையாளம் கண்டுதான் கடலுக்கு போகின்றன. கடல்வாழ் உயிர்களுக்கு இனப்பெருக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றிற்கு நிலவு வெளிச்சம் அவசியம். நிலவு இல்லையெனில் ஆமை போல பல உயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக என்று இனிமேல் நமது காதலர்கள் பாடமுடியாமல் போய்விடுமா என்ன? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா என்று நமது வருங்கால சந்ததியினரும் பாடமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது.
மனநல மருத்துவர்களும் சந்திரனின் ஆதிக்கத்தால் மனநோய்கள் ஏற்படுவதாக கூறுவர். அம்மாக்கள் குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்ட முடியாமல் போனால் என்ன செய்வார்கள்?. நிலாச்சோறு சாப்பிடுவதை நாம் மறந்துவிடத்தான் வேண்டுமா?
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே என்று கவிஞர் பாடியது போல் நடந்து விடுமா? பொறுத்திருந்துதான் பார்ப்போமே…. அதுவரை நெலா அது வானத்தின் மேலே இருந்து விட்டு போகட்டுமே.. அதோடு நாமும் ” இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமைக் கனவுகள் தொடரட்டுமே ” என்று பாடி மகிழ்ந்து கொண்டிருக்கலாமே….















