தமிழ்நாடு
பொதுச்செயலாளர் தினகரன்: சசிகலாவிடம் கேட்டுதான் முடிவெடுத்தாரா?

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் கேட்டு, அவரது ஆலோசனைப்படி தான் அமமுகவை கட்சியாக பதிவுசெய்ய உள்ளதாகவும், பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அமமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் அவசரமாக கூடி டிடிவி தினகரனை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். ஏற்கனவே பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவுக்காக தலைவர் பதவி காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அமமுகவை கட்சியாக பதிவு செய்ய உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்து பரிசுப்பெட்டகம் சின்னத்தை பெற்றதால், அமமுகவை பதிவு செய்யும் கட்டாயத்தில் உள்ளது அந்த கட்சி.
இதனையடுத்து இரட்டை இலை தொடர்பான வழக்கையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே சசிகலா இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பதவியேற்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சசிகலாவிடம் ஆலோசனை நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தினகரன், அவரிடம் கேட்டுவிட்டுதான் முடிவெடுத்தோம். அவர்களைக் கேட்காமலா முடிவெடுக்க முடியும்? கடந்த 12-ஆம் தேதி சசிகலாவை எங்கள் வழக்கறிஞர் சென்று சந்தித்தபோது, தினகரன் கட்சியை தொடங்கி மக்களுக்காகச் செயலாற்றட்டும், நான் சட்டப் போராட்டத்தைத் தொடர்கிறேன் என்று கூறியிருக்கிறார். கட்சி தொடர்பாக சசிகலா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவர் இங்கு வருவார் என்னும் பட்சத்தில் தலைவர் பதவியைக் காலியாக வைத்துள்ளோம் என்றார்.






















