இந்தியா
அமிதாப் பச்சனின் ரோல்ஸ் ராய்ஸ் கார் பெங்களூருவில் பறிமுதல்.. நடந்தது என்ன?
பெங்களூரூவில் அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 7 ஆடம்பர கார்களை கர்நாடகா போக்குவரத்து காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சல்மான் என்ற கார் ஓட்டுநர், பெங்களூரூ யுபி சிட்டி பகுதியில் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்திக் காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அமிதாப் பச்சன் பெயரிலிருந்து காருக்கு தேவையான ஆவணங்கள் ஓட்டுநரின் கையில் இல்லை. எனவே அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
அமிதாப் பச்சனின் தற்போதைய கார் உரிமையாளரான பாபுவிடம் விசாரித்த போது, “பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் இருந்து 6 கோடி ரூபாய் கொடுத்து இந்த காரை 2019-ம் ஆண்டு நான் வாங்கினேன். பெயரை மாற்றுவதற்கு நான் ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டேன். ஆனால் அது இன்னும் செய்யப்படவில்லை.
எங்களிடம் 2 ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. அதில் ஒன்று புதிது. அமிதாப் பச்சன் பெயரிலிருந்த காரை எனது மகள் ஓட்டுநர் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை எடுத்துச்சென்றுள்ளார். அப்போது அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனது மகளை நெலமங்கலா காவல் நிலையத்துக்கு ஆர்டிஓ அதிகாரிகள் அழைத்துள்ளனர். பின்னர் தன்னை வீட்டிற்கு அனுப்ப உதவுமாறு அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். நான் போக்குவரத்து ஆணையரைத் தொடர்புகொண்டு எங்களுக்குத் தேவையில்லாமல் தொல்லை கொடுக்க வேண்டாம் எனக் கூறினேன். அவர் பல கார்கள் ஒரே பதிவு எண்ணில் நகரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அதற்காகவே கார் பறிமுதல் செய்யப்பட்டது. சரியான ஆவணங்களைக் காண்பித்த உடன் வாகனத்தை விடுவிப்பதாகக் கூறினார்” என பாபு கூறினார்.
இது குறித்து பெங்களூரு போக்குவரத்து கூடுதல் ஆணையரைத் தொடர்பு கேட்ட போது, “ரோல்ஸ் ராய்ஸ் கார் சரியான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது. காரின் உரிமையாளர் நேரில் வந்து சரியான ஆவணங்களைக் காண்பித்த பொது அது அமிதாப் பச்சனிடம் இருந்து முறையாக இவர் வாங்கி இருந்தது தெரிய வந்தது. ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு காரை ஒப்படைத்துவிட்டோம்” எனக் கூறினார்.