தமிழ்நாடு
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பிக்பாகெட்.. ஒரு லட்சம் இழந்த பிரமுகர்!
சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவரிடம் ஒரு லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓப்பிஎஸ் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் இயங்கி வரும் நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தை ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் கூட்டினார்.
இனையடுத்து இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் நாங்கள் அனைவரும் தேர்தலை சந்திப்போம் என மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தகுந்த நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அதிமுகவில் மீண்டும் ஓ பன்னீர்செல்வத்தை சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் பேசினார்.
இந்தநிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் உச்சினிமாகாளி என்பவரிடம் ரூபாய் ஒரு லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக தெரிகிறது. அதிமுகவின் தலைமை அலுவலகத்திலேயே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.