Connect with us

தமிழ்நாடு

இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டின் முழு விபரங்கள் இதோ:

Published

on

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று காலை சட்டமன்றத்தில் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதையும் அதில் உள்ள சிறப்பு அம்சங்களையும் அவ்வப்போது பார்த்தோம் இந்த நிலையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முழு விபரங்கள் இதோ:

1957 ஆம் ஆண்டிலிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் அலங்கரித்த இந்த அவையில், இங்கு வைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞரின் திருவுருவப்படம் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முத்திரை பதித்துள்ளன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளார்கள். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு கடமைப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளின் அடிப்படையிலான, தலைநிமிரும் தொலைநோக்குத் திட்ட அறிக்கையில் உள்ள அம்சங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசுத் துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரசின் நிதிநிலைமை சரிவை நிறுத்தி, அதனை சீர்படுத்துவது மக்களுக்கு நாங்கள் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஒரே நேரத்திலோ அல்லது ஒரே ஆண்டிலோ செய்து முடிக்க இயலாத அளவிற்கு இப்பணி மிகக் கடினமாக உள்ளது. இதற்கு, குறைந்தபட்சம் இரண்டு – மூன்று ஆண்டுகள் வரையிலும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெளிப்படைத்தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுநர்களிடமிருந்து கருத்துரைகள் பெறுதல் மற்றும் உறுதியான நடவடிக்கை ஆகிய நான்கு முக்கிய கூறுகளுடன் கூடிய இந்த அரசு செயல்படும் முறையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவாக வகுத்துள்ளார்கள்.

அதே சமயத்தில் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை படிப்படியாக செயல்படுத்தப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற நாளிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார்கள்.
தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று, தனியாக ஒரு வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதாகும். மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை நாளை தாக்கல் செய்வார்.

இந்தத் திட்டத்தின் கீழ், மொத்தம் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய சரிபார்த்தலுக்கு பின்னர் 2,29,216 குறைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு முறையில் ஒன்றிய அரசால் கூட்டாட்சி மனப்பான்மையை நீர்த்துப்போகுமாறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. பெட்ரோல் மீதான ஒட்டுமொத்த ஒன்றிய வரி 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு39 ரூபாயிலிருந்து இன்று 32.90 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல், டீசல் மீதான வரி 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் 3.57 ரூபாயிலிருந்து இன்று 31.80 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்றிய அரசால் விதிக்கப்பட்ட மேல்வரிகள், முழுமையாக அக்குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை எனவும், குறிப்பிட்ட காலத்திற்கு விதிக்கப்படும் கூடுதல் வரிகள் காலவரையின்றி தொடர்கின்றன எனவும் இந்தியக் கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்குவதற்காக வருவாய் மற்றும் வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழு நிறுவப்படும்.

அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை நன்கு அறிய, அனைத்து துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும்.
மாநிலத்திலுள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
கொள்முதல் செய்யும் அனைத்து துறைகளிலும் மின்னணு கொள்முதல் முறை (e-procurement) கண்டிப்பாக பின்பற்றப்படும். அரசு கொள்முதல் முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கென, தனி மின்னணு கொள்முதல் வலைத்தளம் ஒன்று உருவாக்கப்படும்.

திறனையும் வெளிப்படைத்தன்மையும் மேம்படுத்துவதற்காக, திட்டமிடுதல், விலை விவர அட்டவணையை புதுப்பித்தல், செந்தர விலைப் பட்டியலை புதுப்பித்தல், திட்ட வடிவமைப்பு, பணிகளின் மதிப்பீடுகள், ஒப்பந்தப் புள்ளிகள், பணிகளை அளவிடுதல் மற்றும் பணிப் பட்டியல்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.
அரசு சொத்துகள் மற்றும் இடர் மேலாண்மை

பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு, மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
அதில் அனைத்து அரசு நிலங்கள் வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு ஒன்று அமைக்கப்படும். அதன் மூலம், பொது நலன் திறம்படப் பாதுகாக்கப்படுவதையும், அரசுக்கு வளங்கள் உடனுக்குடன் கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில், வரிவிதிப்பு, நில விவகாரங்கள், பணியாளர் விவகாரங்கள் மற்றும் கொள்முதல் பிரச்சினைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும்.
இடர் மேலாண்மை அமைப்பு வழக்கு மேலாண்மை அமைப்பு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களைக் கொண்ட அனுபவமிக்க குழுவால் கண்காணிக்கப்படும்.
அதிக நம்பகத்தன்மை மற்றும் அதிகரிக்கப்பட்ட உற்பத்தித் திறன்

அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். அனைத்து அரசுத் துறைகளிலும் முகமைகளிலும் உள் தணிக்கை செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்வதற்காக அரசில் செயல்படும் அனைத்துத் தணிக்கைத் துறைகளும் நிதித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்.
சட்டமன்றத்தின் பங்கினை வலுவூட்டுதல்

சட்டமன்றத்தின் நூற்றாண்டை குறிக்கும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த மன்றத்தில் 1921 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும். பேரவையின் நிதிக்குழுக்களின் (மதிப்பீடு, பொதுக் கணக்கு, பொதுத்துறை நிறுவனங்கள்) செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காக, உரிய அலுவலர்களுடன் கணினிமயமாக்கப்பட்ட சிறப்புச் செயலகம் அமைக்கப்படும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்குப் புத்துயிர் அளிக்கப்படும். 2010 முதல் வழங்கப்படாமலிருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, இனி ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 3-ம் நாள், 10 இலட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்.

தலைமைச் செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துத் துறை அலுவலகங்கள் வரையிலும், தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.
உலக அளவில் போற்றப்படும் தமிழ்ப் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.

இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, நாட்டில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அளவாக, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, முதற்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள்

முதியோர் ஓய்வூதியத் திட்டம் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, அனைத்துத் தகுதிவாய்ந்த நபர்களும் விடுதலின்றிப் பயன்பெறுவதை இந்த அரசு உறுதி செய்யும். மாநிலத்திலுள்ள மக்களுக்கு சமூகப்பாதுகாப்பிற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதில் முன்னணி நிலையை தமிழ்நாடு மீண்டும் பெறும் வகையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சமூகப்பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு56 கோடி ரூபாய் என உயர்த்தப்பட்டது.

நிலம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைப்பதற்காக, துல்லியமான புவியிடங்காட்டி (D-GPS) மற்றும் ஏனைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதிலும் நவீன நில ஆய்வை இந்த அரசு மேற்கொள்ளும்.
இந்த நோக்கத்திற்காக, நில நிர்வாக ஆணையாளரின் தலைமையின் கீழ் தமிழ்நாடு சிறப்பு சமூகத் தாக்க மதிப்பீடு – மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

மாநிலப் பேரிடர் நிவாரண மற்றும் தணிப்பு நிதியை அதிகரிக்கவும், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் தொகையை விடுவிக்கவும் வேண்டுமென ஒன்றிய அரசை நாம் வலியுறுத்துவோம்.

காவல்துறையில் ஒப்பளிக்கப்பட்ட 1,33,198 பணியிடங்களில், மீதமுள்ள 14,317 காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெரும் குற்றங்களில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரும் வகையில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை

தற்போதுள்ள 1985 ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். மீட்புப் படையினர் குறைவான நேரத்திற்குள் வந்து சேரும் வகையில், புதிய தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்கள் அறிவியல்பூர்வமாக வரைபடங்களின் உதவியுடன் தேர்வு செய்யப்படும்
சாலைப் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும். மேலும், போக்குவரத்து ஆணையரகம், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.
நீதித்துறை நிர்வாகம்

அடுத்த ஐந்து ஆண்டுகளில், அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும். உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்குத் தேவையான ஆதரவை இந்த அரசு வழங்குவதுடன், நீதிமன்றங்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைத் திறன்படப் பயன்படுத்துவதற்கும் உதவி புரியும்.
பொது விநியோகத் திட்டம்

இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்தி 2021 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இரு தவணைகளாக, 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண ரொக்க நிதியுதவியாக 4,000 ரூபாய், வழங்கப்பட்டுள்ளது மற்றும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலின் உச்சத்தில் மளிகைப் பொருட்களின் சிறப்புத் தொகுப்பு ஒன்றும் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, 9,370.11 கோடி ரூபாய் செலவில், இந்த கோவிட் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டன.
தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்வதற்கு குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.
நீர் வளங்கள்

இந்த அரசு மாநிலத்தின் குறைந்த நீர் ஆதாரங்களை முறைப்படி பயன்படுத்தி அவற்றை பாதுகாப்பதற்கு அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கும் விதமாக நீர்வளங்களுக்கு தனியே ஒரு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நோக்கத்தைச் செயல்படுத்தும் விதமாக, அடுத்த 10 ஆண்டுகளில், 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்.
மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை போன்ற முக்கிய அணைகளின் நீர்த்தேக்க கொள்ளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த, தேவையான திட்டங்களை இந்த அரசு வகுக்கும்.
பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ், நீர்நிலைப் பகுதிகளைப் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்காக 2021-22ஆம் ஆண்டில்24 கோடி ரூபாய் செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்.

2021-22ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 50 குறு நீர்ப்பாசனக் குளங்களைத் தரப்படுத்துலுக்கான சிறப்புத் திட்டம் ஒன்று இந்த அரசால் தொடங்கப்படும்.
நீர்வளத் துறையின் பணிகள் நவீனமயமாக்கப்படும். நவீன தொழில் நுட்பங்களான ஆளில்லா விமானங்களின் மூலம் ஆய்வு, துல்லியமான புவியிடங்காட்டி மற்றும் புவியியல் தகவல் அமைப்பு போன்றவற்றின் உதவியுடன் பணிகள் மேம்படுத்தப்படும்.

நவீன தொழில் நுட்பங்களான ஆளில்லா விமானங்களின் மூலம் ஆய்வு, தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு, மொத்தம் 30 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

கல்லணை கால்வாய் புதுப்பித்தல் விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து 2,639.15 கோடி ரூபாய் நிதி உதவி பெறப்பட்டுள்ளது.
இரண்டாவது அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டமானது26 கோடி ரூபாய் செலவில் உலக வங்கியின் நிதியுதவியுடன் துவங்கப்படவுள்ளது.

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்துடன் இணைந்து, சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களை அமைக்க மொத்தம்97 கோடி ரூபாயும், மீன் இறங்கு தளங்களை மேம்படுத்த 143.46 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்

தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மக்களின் முழுஅளவிலான பங்களிப்புடனும், பலதரப்பட்ட நம் மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடும் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்.

பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையின் கீழ், இந்த அரசு மொத்தம் 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்றினை அமைக்கும்.

ஆளில்லா விமானங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் மேலாண்மை அமைப்புகள் (MIS), நவீன ஆயுதங்கள் மற்றும் வன நிலப்பரப்பிற்கேற்ற வாகனங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் அடுத்த 5 ஆண்டுகளில், சர்வதேச நீலக் கொடி சான்றிதழை (Blue Flag Certifcate) பெறுவதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

‘நீலக்கொடி சான்றிதழ்’ இந்தியாவின் முதல் “ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்” ஒன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும். இந்தியாவின் முதல் “ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்” ஒன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்தவும், அதன் இயற்கை சூழலை மீளுருவாக்கவும், மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையின்கீழ், “தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்” ஒன்றினை இந்த அரசு ஏற்படுத்தும். இந்த இயக்கம் ஐந்து ஆண்டுகளில் 100 ஈர நிலங்களை கண்டறிந்து, அவற்றின் இயற்கை சூழலை மீள உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும். இதனால் அவற்றை சார்ந்தோரின் வாழ்வாதாரம் உயரும். இதற்கென 150 கோடி ரூபாய் நிதி ஐந்தாண்டுகளுக்கு செலவிடப்படும்.
கட்டுமானத் தொழில்நுட்பங்கள்

சுற்றுச்சூழலுக்கும், காலநிலை மாற்றத்திற்கும், ஏற்ற கட்டுமானத் தொழில்நுட்பத்திற்கு மாறுவது மிகவும் அவசியமாகும். கட்டுமானச் சவால்களை எதிர்கொள்வதற்காக கட்டட தகவல் மாதிரியாக்கம், புதுமையான விரைவு கட்டுமானத் தொழில்நுட்பம், தானியங்கு தொழில்நுட்பம், நீடித்து நிலை நிற்கும் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஆகியவற்றை செயல்படுத்துவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி, திட்ட மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பட்டியலிடும் நடைமுறைகள் இவையனைத்தும் ஓராண்டுக்குள்ளாக முழுமையாக மின்னணுமயமாக்கப்படும்.
ஊரக வளர்ச்சி

மாநிலத்திலுள்ள அனைத்து 79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். கிராமப்புரங்களில் அமைந்துள்ள27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்படும். தற்போது வீட்டிற்கான குடிநீர் இணைப்பு இல்லாத
83.92 லட்சம் குடும்பங்களுக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள்ளாக குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.

முழுமையடையாத அனைத்து வீடுகளும் விரைந்து முடிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்வதுடன், 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 8,017.41 கோடி ரூபாய் செலவில், மேலும் 2,89,877 வீடுகள் கட்டப்படும். கிராமப்புரங்களில் தற்போது வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கும் அடுத்த5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான 50 ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக மாநில அரசின் தரப்பிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால், ஒரு வீட்டிற்கான அரசு மானியம்76 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் ஏழை, எளிய பயனாளர்களுக்கு விரைவாக, விலைக் குறைவாக வீடுகள் கட்டுவதற்காக, நவீன, விலை குறைவான கட்டுமான தொழில்நுட்பங்களை இந்த அரசு ஊக்குவிக்கும். 2021-22ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் கிராமப்புர வீட்டு வசதித் திட்டத்தில், 3,548 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி, நடப்பு ஆண்டிலிருந்து ஒரு தொகுதிக்கு 3 கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப்படும்.
இந்த அரசு, 2021-22 ஆம் ஆண்டில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. இத்திட்டம், குக்கிராம அளவில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பிற்கான இடைவெளிகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அறிமுகப்படுத்திய மிகப் புகழ்பெற்ற திட்டம் ‘நமக்கு நாமே’ திட்டம். இத்திட்டம், உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து உள்ளூரின் முக்கியமானப் பணிகளை மேற்கொள்ள மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 2021-22 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில்79 கோடி ரூபாய் செலவில் 2021-22 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் 5,500 கோடி ரூபாய் சிறப்பு கோவிட் கடன் உட்பட 20,000 கோடி ரூபாய் கடன் உறுதிசெய்யப்படும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

குப்பைகள் உருவாகும் நிலையிலேயே 100 சதவிகிதப் பிரித்தலை உறுதி செய்வதன் வாயிலாகவும், வீடுகள்தோறும் குப்பைகள் சேகரித்தல் மற்றும் 100 சதவிகிதம் அகற்றுவதன் வாயிலாகவும் நாம் குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவோம். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும். அனைத்து நகர்ப்புரங்களிலும் பாதசாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தத்தக்க நடைபாதைகள் அமைக்கப்படும்.

நமக்கு நாமே திட்டப் பணிகளில் கணிசமாக பங்களிப்பவர்களுக்கு ஒவ்வோராண்டும் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சேவையில் மாநகராட்சி மற்றும் நமது சேவையில் நகராட்சித் திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் இணையவழி சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படும். திருச்சிராப்பள்ளியில் புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் TUFIDCO நிதியுதவியுடன் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் நோக்கத்தில், ‘கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளது.

2021-22-க்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில், சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய மேம்பாட்டு வங்கியின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கென 2021-22 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் 87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு, சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை0 தொடங்கப்படும். சென்னை நகரில் 3 இடங்களில் அதாவது கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல், கொன்னூர் நெடுஞ்சாலை -ஸ்ட்ராண்ஸ் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மொத்தம் 2,056 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் ஏற்படுத்தப்படும். சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டம் மொத்தம் 2,371 கோடி ரூபாய் செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டம் விரைவில் உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்படும்.
நகர்ப்புர ஊதிய வேலைவாய்ப்பு

பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், வெள்ள நீர் வடிகால்கள், சாலைகள், கட்டடங்கள் போன்ற பொதுச் சொத்துகளை கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளிலும் நீர்நிலைகளைப் புதுப்பித்தல் போன்றவற்றிலும் நகர்ப்புர ஏழைகளை ஈடுபடுத்துவதன் மூலம் பயன்தரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்னோடி திட்டமாக இந்த அரசு ஒரு நகர்ப்புர ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏற்படுத்தும். 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி

தமிழ்நாடு 1961 ஆம் ஆண்டு வீட்டுவசதி வாரியச் சட்டம், தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு குடிசைப்பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம், தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் உள்ளிட்ட வீட்டுவசதித் துறையின் பழைய சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்.
பெருந்திட்டங்களின் கீழுள்ள நிலப்பரப்பு 22 சதவீதமாக உயர்த்தப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.

புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள், மதுரை, கோயம்புத்தூர் – திருப்பூர் பகுதி, வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் பகுதிகளுக்கு ஏற்படுத்தப்படும்.

10 ஆண்டு காலத்திற்குள், தமிழ்நாடு முற்றிலுமாகக் குடிசைகளற்ற மாநிலமாக விளங்க வேண்டுமென்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்காக 3,954.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் உட்பட ஆட்சேபணையுள்ள புறம்போக்கு நிலங்களிலிருந்து, குடிசையில் வாழும் மக்களை மனிதாபிமானத்துடன் நியாயமான முறையில் மறுகுடியமர்த்துவதற்காக, அனைத்து பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து ஒரு புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை வகுக்கப்படும்.

இரண்டாவது தமிழ்நாடு வீட்டுவசதித் துறை வலுவூட்டும் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் விரைவில் மேற்கொள்ளப்படும். ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், நகர்ப்புர ஏழை மக்களுக்கு பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலைத்திருக்கக்கூடிய அனைவருக்குமான வீட்டுவசதித் திட்டத்தின் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நிறைவடைந்துள்ளன.

அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்கக்கூடிய 2,200 கி.மீ சாலைகளை 4 வழிச் சாலைகளாகவும், வட்ட தலைமையகத்தை இணைக்கும் 6,700 கி.மீ ஒற்றை மற்றும் இடைநிலை வழிச் சாலைகளை இரட்டை வழி நெடுஞ்சாலைகளாக மேம்படுத்துவதே இந்த அரசின் நோக்கம். தற்போது புற வழிச் சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புற வழிச் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநிலத்தில் உள்ள வெண்பலகை கொண்ட நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்திருந்தார். இந்த நோக்கத்திற்காக, 703 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 750 கோடி ரூபாய் டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 623.59 கோடி ரூபாய் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசு, நிதி மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பேருந்து சேவைகளின் இயக்கத் திறனை மேம்படுத்துவதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும். போக்குவரத்து நிறுவனங்கள் சிக்கனமாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்கும், விதிமுறை அடிப்படையிலான செயல்திறன் குறியீடுகளின் இலக்கை அடைவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இலவச அல்லது மானியம் அளிக்கப்பட்ட பேருந்துப் பயணம் வேண்டுமென அரசு விரும்பும் இனங்களில், நெறிசார் செலவு அளவுருக்களின் அடிப்படையில் வெளிப்படையான மானியம் வழங்கப்படும். இந்தப் புதிய முறை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்படும்.

மெட்ரோ இரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி புறவழித்தடத்திற்கான சேவைகள், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதாவது நான்கு ஆண்டுகளுக்குள் தொடங்கும். மெட்ரோ இரயில் திட்டத்தின் மொத்த இரண்டாம் கட்டமும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். அதே நேரத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை, தாம்பரம் வழியாக விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டிக்கும் பணியை இந்த அரசு விரைவாகத் தொடங்கும். மதுரையில் மெட்ரோ இரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும்.
எரிசக்தி

ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளிலிருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது.
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சந்திக்கும் பெரும் நிதி இழப்புகள் முற்றிலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழித்தடம் மின்துறை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய நிறுவனங்களின் நிதி மறுசீரமைப்பு விரிவாக ஆய்வு செய்யப்படும். அந்த அறிக்கையின் மீது அரசு விரைந்து செயல்பட்டு மின் வாரியத்தின் கழக நிறுவனங்கள் நொடிந்து போவதிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில், சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் வாயிலாக, மாநிலத்தில் 17,980 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும்.

வேளாண்மைக்கான இலவச மின்சாரம் மற்றும் வீட்டிற்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும் 19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்

பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக இந்த வரவு-செலவுத்திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி, கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா
40 தொடுதிரை கையடக்க கணினிகள்(Tablet)22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

2025-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும், அடிப்படைக் கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’, 66.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில்18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20.76 கோடி ரூபாயில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி, கவின்திறன் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன், மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைக் குறைப்பதே இந்த அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு விரைவாக செயல்படும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான கொரோனா தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கற்றலில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதற்காக பள்ளி நேரங்களை தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே குறைதீர் கற்றல் வழங்குவதற்கான விரிவானத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்.

மேலும் தரத்தை மேம்படுத்தி, அதிகளவிலான கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவின் தரநிலையை அடைவதற்கு அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும். அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள், குறிப்பாக, ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். கற்றல் மேலாண்மை அமைப்பு மற்றும் நிறுவன வள திட்டமிடல் மென்பொருளானது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அமைந்திட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் விடுதிகள் கட்டப்படும்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான இணைவு வழங்கும் பல்கலைக்கழகமாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வரும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏதுவாக இருக்கும்.

மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்படும்.
நோய்த் தொற்றைத் தடுக்க தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமாகும். நாள்தோறும் 8 இலட்சம் பேருக்குத் தடுப்பூசி போடும் திறன் பெற்றிருந்தும், 2.4 இலட்சம் அளவில் மட்டுமே தடுப்பூசி வரப்பெறுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு போதுமான அளவில் தடுப்பூசி வழங்கவேண்டிய தேவையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களின் கவனத்திற்கு அடிக்கடி எடுத்துச் சென்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் மகத்தான முன்மாதிரித் திட்டம் உருவாக்கப்பட்டு மொத்தம்16 கோடி ரூபாய் செலவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அனைவரின் பாராட்டையும் பெற்ற 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைகள் திட்டத்தை09.2008 அன்று தொடங்கி வைத்தார். இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையானது 1,303 ஆக உயர்த்தப்பட்டு, சேவைகளின் தரம் மேலும் மேம்படுத்தப்படும்.

23-07-2009 அன்று தொடங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள சிறந்த மருத்துவ வசதிகள் ஏழை மக்களுக்கு கிடைப்பதை உறுதிபடுத்தும் வண்ணம், கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் நோய்களும், சிகிச்சை முறைகளும் இந்த அரசால் விரிவுப்படுத்தப்பட்டன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைத்திட திட்டமிட்டார். அதற்கென, உரிய நிலமும் கண்டறியப்பட்டது. அதற்குப் பின், இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப் போல் சித்தாவிற்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென, முதல்கட்ட நிதியுதவியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு மானியங்களை வழங்குவதற்காக, 215.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்0 எனும் நவீன தரத்திற்கு உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இளைஞர்களுக்கு வழங்கப்படும். இதனால், மேலும், சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நெய்வேலியில் அமைக்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தொழிற்சாலைகளில் திறம்பட வேலை செய்வதை உறுதி செய்வதற்காக, எதிர்கால வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சியினை, தெரிவு செய்யப்பட்ட 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்க 60 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

ஒற்றைச் சாளர அமைப்புமுறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகளும் ஒற்றைச் சாளர வலைவாசலின் கீழ் கொண்டு வரப்படும்.

வளர்ந்து வரும் துறைகளில் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றிற்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும். முதலீட்டாளர்களின் முதலீடு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், சிறப்பாக திட்டமிடுவதற்கும், மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளைப் பற்றி விவரமான, துல்லியமான தரவுதளம் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டின் உள்ள தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின்-வாகனப் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும். தொழில்துறை அலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 MLD அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களுக்கான 10 MLD TTRO கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.

நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. அதனை முன்னெடுக்கும் வகையில் “நிதிநுட்ப கொள்கை” ஒன்று வெளியிடப்படும். மேலும், வழிகாட்டி நிறுவனத்தில் இதற்கென பிரத்யேகமான “நிதிநுட்ப பிரிவு” ஒன்று அமைக்கப்பட்டு, நிதிநுட்ப நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக நந்தம்பாக்கத்தில் இந்த நிதிநுட்ப நகரம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

பழைய மாமல்லபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப துறை பெருவழியாக வளர்ச்சியடையவதற்கு, 2000ஆம் ஆண்டில் சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது முக்கிய காரணமாகும். இப்போது தமிழ்நாட்டிலுள்ள நிலை II மற்றும் நிலை III நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

ஓசூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிகளை நிறுவுவதாக ஒன்றிய அரசு அறிவித்த போதிலும், அதற்கான ஒன்றிய அரசின் உதவி குறைவாகவே உள்ளது. கோயம்புத்தூரில், 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், 3500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இப்பூங்காக்களில், தயார்நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் (Play & Play facilities) உட்பட உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்கென இப்பூங்காக்களில், முதற்கட்டமாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,000 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி, கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும், இந்நிறுவனங்கள் வளர்ச்சி அடைய தேவைப்படும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கவும், டாக்டர்.ந.சுந்தரதேவன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான கடன் உத்தரவாதத் திட்டத்தை, குறிப்பாக குறு தொழில் நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் வணிகத் திறனின் அடிப்படையில் நிதி நிறுவனங்களும் நவீன நிதி தொழில்நுட்ப நிறுவனங்களும் கடன் வழங்கிட ஏதுவாக, மின்னணு தகவல் தரவுகள் அடிப்படையிலான கடன் மதிப்பீட்டு முறை ஏற்படுத்தப்படும். இந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பங்குச் சந்தைகள் மூலம் முதலீட்டைப் பெற முயலும் இந்நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்து, 30 இலட்சம் ரூபாய் வரை பட்டியல் இடும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு கடன் அளித்தவர்கள் தங்களது கடன்களை மறு கட்டமைப்பு செய்ய முன்வந்தால், அரசு கடன் உத்தரவாதத்துடன் நிதி நிறுவனங்களின் உதவியுடன் கடன் வழங்கப்படும்
.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களின் நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிப்பதற்கான வழிவகைகளை உறுதி செய்வதற்கான வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடித் தளங்களின் கீழ் (TReDS), அனைத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.

ஐந்து பெரிய தொழிற் தொகுப்புகளை மருந்து மற்றும் பெட்ரோ இரசாயனங்கள் துறையிலும், துல்லியமான உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து (Smart mobility) ஆகிய துறைகளிலும் 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.

265 ஏக்கர் மொத்தப் பரப்பளவில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. சிட்கோ தொழில்துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்காக விலைக் கொள்கை சீரமைக்கப்படும்.

சுற்றுப்புரம் மற்றும் சூழலுக்கு பாதிப்பின்றி சுரங்கப் பணிகளை செயல்படுத்திட இந்த அரசு நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும்.

இது தவிர, பசுமை சுங்க மேல்வரி விதிக்கப்பட்டு ஒரு பசுமை நிதியம் உருவாக்கப்படும். இதன் மூலம் கைவிடப்பட்ட குவாரிப் பகுதிகள் முறைப்படி மூடப்பட்டு பாதுகாக்கப்படும். ஆறு கோடி வருடங்களுக்கு முந்தைய உள்நாட்டு புதை வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ள அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில், புவியியல் புதைபடிவ பூங்கா ஒன்று பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

துணிநூல் துறையில் கவனம் செலுத்துவதற்காக, ஒரு தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்.

தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55 சேவைகள் இணையதளம் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்திற்குள், 29 துறைகள் மூலமாக வழங்கப்படக்கூடிய 600க்கும் மேற்பட்ட சேவைகளும் மின்னணு முறையில் வழங்கப்படும்.

போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் 130 கோடி ரூபாயில் நிலை நிதி ஏற்படுத்தப்படும்.

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.

பக்தர்களின் அனுபவத்தை அதிகரிப்பதற்கும் 539 திருக்கோயில்களுக்கான பெருந்திட்டங்கள் அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மற்றும் பூம்புகாரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும்.

திருநங்கைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 1,071 கைவிடப்பட்ட திருநங்கையர் பயன்பெறும் வகையில், மூன்றாம் பாலினத்தவருக்கான ஓய்வூதியத் திட்டத்திற்காக50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்த குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இந்த அரசு சிறப்பு முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை 5,963 குழந்தைகள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 96 கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது.

அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்துவதற்காக சிறப்பு ஒதுக்கீடாக48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி சார்ந்த பொருட்களை வழங்குவதற்கு 23.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு முட்டைகள் மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை சீரமைக்கப்படுவதன் மூலம் செலவினங்கள் குறைக்கப்படும்.

நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் உதவியுடன் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில்02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர சில்லறைச் செலவினக் கட்டண உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும். தற்போதுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதன ஒதுக்கீடாக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணத்தினாலும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரச் செய்ததினாலும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்தக் கல்வியாண்டில் இருந்து வழங்க, ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சமூகநீதி பாதுகாக்கப்பட்டுள்ளது.

காத்திருப்புப் பட்டியலில் உள்ள 9,173 தகுதியுள்ள நபர்களுக்கும் மாதத்திற்கு 1,500 ரூபாய் பராமரிப்புத் தொகையை உடனடியாக வழங்குவதற்காக திருத்த வரவு செலவுத் திட்டத்தில் பராமரிப்புத் தொகைக்கான ஒதுக்கீடு 64 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள 9,185 நபர்களுக்கு அவர்கள் விரும்பும் கருவி வழங்கப்படுவதை உறுதி செய்ய வரவு செலவுத் திட்டத்தில் கருவிகள் மற்றும் உபகரணங்களுக்காக66 கோடி ரூபாயென உயர்த்தப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த நபர்களுக்கு அவர்கள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களின் வகை மற்றும் மாதிரியில் தெரிவினை வழங்கும் வகையில், நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு அறிமுகப்படுத்தும்.
உலக வங்கியின் உதவியுடன் Rights திட்டத்தை இந்த அரசு தொடங்கவுள்ளது. குறைபாடுகளை தொடக்க நிலையில் கண்டறிதல், தடுத்தல், பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் கல்விச் சேவைகளை பெருமளவில் அணுகுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு மற்றும் அவர்களால் அமைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டரங்கங்கள் நிறுவப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க ஒரு சிறப்பு நிதியளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு முன் தணிக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, அவை அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணம் செலுத்தும் வங்கியாக(Payments Bank) மாற்றப்படும்.
அரசு ஊழியர் நலன்

இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை, 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும்

பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1-4-2022 முதல் வழங்கப்படும்.
பொது நிதி மேலாண்மை

வரும் 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட அறிக்கையுடன், எளிய மொழியில் பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும். இதனால் அரசின் நிதிநிலையை பற்றி ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய விவாதங்கள் ஊக்குவிக்கப்படும்.

இத்திட்டத்தின் நோக்கம், நிதியுதவியை இல்லத்தரசிகளுக்கு வழங்குவதே ஆகும், என உறுதியளிக்கிறேன். எனவே, குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை.
இத்திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கான திட்டமாகும். கோவிட் பெருந்தொற்றின் போது, மாநிலத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4,000 ரூபாய் வழங்கப்பட்டது.

கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வது இந்த அரசின் முன்னுரிமையாகும். முந்தைய அரசு, தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 12,110.74 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாக இது அமைந்தது. இதற்காக 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுபோன்ற இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால் அதுகுறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து இந்த முடிவு எடுக்கப்படும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர்.

கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவதற்கு ஏதுவாக, இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதி வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக, 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவிற்கு குறைக்கபடும். இது, மாநிலத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கும் பெரிய நிவாரணமாக அமையும். இதனால் ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

வரவு-செலவுத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்

இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,18,991.96 கோடி ரூபாயாக உள்ள ஒட்டுமொத்த வரி வருவாய் மதிப்பீடுகளை, 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,02,495.89 கோடி ரூபாயாகக் குறைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன்.

மொத்த வருவாய் வரவுகளில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் பெரும்பகுதியாக உள்ளது. இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,35,641.78 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மதிப்பீடுகள், 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,26,644.15 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 14,139.01 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி அல்லாத வருவாய், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் காட்டிலும் சற்றுக் குறைவாக உள்ளது.

2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில், ஒட்டுமொத்த வருவாய் செலவினங்கள் 2,61,188.57 கோடி ரூபாயாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளின் தாக்கத்திலிருந்து மாநிலத்தின் பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீண்டு வராத காரணத்தால், நிதிச் சீரமைப்பு செய்வதற்கான காலம் இன்னும் வரவில்லை. எனவே, 2021-22 ஆம் ஆண்டில் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 41,417.30 கோடி ரூபாயாக இருக்கும் என தவறாக கணிக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை, 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உண்மையில் 58,692.68 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற அசாதாரணமான காலத்தின் காரணமாக, வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது எனவும், இனிவரும் காலங்களில், நிதி ஒழுக்கம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பில், இந்த அரசின் உறுதியை எள்ளளவும் பாதிக்காது என்பதையும் உறுப்பினர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

மூலதனச் செலவினங்களுக்காக இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 43,170.61 கோடி ரூபாய் திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 42,180.97 என குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில், 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 92,529.43 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கு நிதிப் பற்றாக்குறை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில்33 சதவீதம் என, பதினைந்தாவது நிதிக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஒட்டு மொத்த விதிகளுக்குள் நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி விகிதத்தை அதிகரிப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சீர்திருத்தம் ஆகும். வெள்ளை அறிக்கையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, 2006-07 ஆம் ஆண்டில்48 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வரி விகிதம் 2020-21 ஆம் ஆண்டில் வெறும் 5.46 சதவீதம் என 3.02 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதுள்ள மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இது சுமார் 65,000 கோடி ரூபாய்க்கும் மேலான வருவாய் இழப்பைக் குறிக்கிறது. இது இந்த மாநிலத்தால் சரி செய்ய வேண்டிய இழப்பாகும்.

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் நிலுவையிலுள்ள 28,000 கோடி ரூபாயை வசூலிக்க எளிமையாக, அரசிற்கு பலனளிக்கக்கூடிய விதமாக “சமாதான் திட்டம்” அறிவிக்கப்படும்.
மோசடியான ஆவணங்கள் மூலம் ஏமாற்றப்பட்ட உண்மையான உரிமையாளர்களின் துயரத்தை நீக்க 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தை திருத்தி, அத்தகைய ஆவணங்களின் பதிவை இரத்து செய்ய பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படும்.

உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு பதிவு மற்றும் வாடகை ஒப்பந்த ஆவணங்களை இணைய வாயிலாகவே பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். 1.1.1975 முதல் மட்டுமே வில்லங்கச் சான்றினை இணையவழியில் பார்க்க முடியும். இந்த வசதி, 1.1.1950 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவு செய்யப்படும். அதற்கு முந்தைய ஆவணங்களும் பட்டியலிடப்பட்டு கணினிமயமாக்கப்படும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்9 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்10 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்10 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா11 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா11 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

Translate »
Martinstools | professional saas tools for everyone. Surowce do produkcji suplementów diety. Die botanischen termine der stadt köln im mai 2026.