இந்தியா
கனமழை எதிரொலி: 30 ரயில்கள் ரத்து!

மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் வரலாறு காணாத மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடும் வெள்ளப் பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள் அவதியில் உள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் மிக கனமழை பெய்து வருவதால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 30 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கொங்கன் ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் 12 ரயில்கள் திருப்பி விடப்பட்டு உள்ளதாகவும் 8 ரயில்கள் இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மகாராஷ்ட்ர மாநிலத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் அவற்றை சரி செய்த பின்னரே ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அதனால் சுமார் 6 ஆயிரம் பயணிகள் நடுவழியில் தவித்து வருவதாகவும் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன என்பதும் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.























