தமிழ்நாடு
மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் ஊரடங்கு இரண்டு வாரம் தொடரும். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் ஊரடங்கு போடும் நிலை வராது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய முழு முடக்க உத்தரவை தமிழக அரசு அமல் செய்ய உள்ளது.

இந்த முழு முடக்கத்தின் போது, மதியம் 12 மணி வரை மட்டும் தான் மளிகை கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திறந்திருக்கும், ஆன்லைன் வணிக தளங்கள் செயல்பட அனுமதியில்லை, அவசியத் தேவையுள்ள தனியார் நிறுவனங்கள் மட்டுமே செயல்படும், உரிய காரணங்களின்றி மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஸ்டாலின், ‘தமிழகத்தில் மே 24 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது. அப்படியே ஊரடங்கை மீண்டும் அமல் செய்யும் சூழல் வந்தால், தொழில் நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.


















