தமிழ்நாடு
செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் பலர் உயிரிழந்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் சிலர் உயிரிழந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் நான்கு பேரும் அதன் பின்னர் 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மொத்தம் 11 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என ஏற்கனவே தமிழக அரசு கூறி வந்த நிலையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக இது போன்ற சம்பவம் இனிமேலும் ஏற்படாமல் ஆக்சிஜன் வரவழைக்க வேண்டும் என்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இனியும் ஒரு உயிர் கூட இழக்க கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.




















