தமிழ்நாடு
மினி லாக்டவுன், தியேட்டர்கள் மூடல்: இன்று மாலை அதிரடி அறிவிப்பு வர வாய்ப்பு!~

தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டுமன்றி மேலும் சில நாட்கள் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் திரையரங்குகள் மூடப்படலாம் என்றும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறப்பதற்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து உள்ளிட்ட பல அம்சங்களிலும் கைவைக்கப் போவதாகவும் இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன் இருந்த முழு ஊரடங்கு போல் கிட்டத்தட்ட வரும் என்று கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை தமிழக அரசு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனாவின் கோரத்தாண்டவம் வரும் மே மாதம் மிக மோசமாக இருக்கும் என்றும் மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை என்றும், இதுதான் நிதர்சனம் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு வேறுவழியின்றி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.




















