இந்தியா
நாடு முழுவதும் பாஸ்டேக் அமல்: சுங்கச்சாவடிகளில் வாக்குவாதம்!

நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுங்கச் சாவடியில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என்றும் இந்த முறை வாகனங்களில் இல்லாதவர்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் பாஸ்டேக் இல்லாதவர்களிடம் இருமடங்கு கட்டணங்களை சுங்கச்சாவடி அதிகாரிகள் வசூலித்ததால் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கு அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று பல சுங்கச்சாவடிகளில் இந்த வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளையாக இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் வாக்குவாதங்கள் செய்து வருகின்றனர்.
இதனால் பல சுங்கச்சாவடிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமன்றி நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு உள்ளது. இதற்கு உடனடியாக மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



















