இந்தியா
நாடு துண்டு துண்டா சிதறும் மிஸ்டர் மோடி- சிவசேனா கடும் எச்சரிக்கை!

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு மோசமானால், சோவியத் யூனியன் போல இந்தியா, துண்டு துண்டாக சிதறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா. அக்கட்சியின் நாளிதழான ‘சாம்னாவில்’ தான், இது குறித்தான தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
சாம்னாவில் கூறியிருப்பதாவது, ‘அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசு, நாட்டு மக்களை கஷ்டப்படுத்துகிறது என்பதை உணராமல் இருந்தால், நம் நாடு சிதறுண்டு போகும். 2020 ஆம் ஆண்டை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் நம்பகத்தன்மை குறித்தும், அதன் தலையீடு குறித்தும் நாம் கேள்வியெழுப்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பாஜக எங்கெல்லாம் ஆட்சியில் இல்லையோ, அந்த மாநிலங்களில் கூட தேசிய உணர்வு என்பது மேலோங்கியே இருக்கிறது. மாநிலங்களின் கூட்டமைப்பாக இந்தியா வலுவாக உள்ளது. ஆனால் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்தால் தேசிய உணர்வு என்பது முழுவதும் பாதிக்கப்படுகிறது.
ஜனநாயகத்தில் அரசியல் ரீதியிலான வீழ்ச்சி என்பது மிக மிக சாதாரணமானது. ஆனால் மத்திய அரசு, மாநில அரசுகளை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கவிழ்க்க மத்திய அரசு நடந்து கொள்ளும் விதம் சரியல்ல. இதற்கு முன்னரும் பல மாநில அரசுகளின் கவிழ்ப்புகளுக்குப் பின்னணியில் மத்திய அரசு இருந்துள்ளது. இந்தப் போக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது..

















