தமிழ்நாடு
சபாநாயகர் மூலம் கருணாஸுக்கு அடுத்த நெருக்கடி!

திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக சட்டசபையின் சபாநாயகர் தனபால் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது சட்டசபை உறுப்பினர் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் கடந்த சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். கூவத்தூரில் நடந்த சம்பவங்கள் குறித்த ரகசிய வீடியோ இருப்பதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் கூவத்தூரில் நடந்ததை கூற தயார் எனவும் கூறி அதிர வைத்தார்.
இதனையடுத்து வேறு சில வழக்குகள் அவர் மீது பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த கருணாஸ் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேசி வருகிறார். மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏவும் அவரை சந்தித்து பேசினார். இந்நிலையில் கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் அதிமுக அரசை விமர்சிப்பதாக எம்எல்ஏ ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வருக்கு எதிராகப் பேசியது குறித்து விளக்கம் கேட்டு, கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கருணாஸ் சரியான பதிலை அளிக்காத நிலையில் அவரது சட்டசபை உறுப்பினர் பதவிக்கு கூட ஆபத்து வரலாம் என பேசப்படுகிறது.

















