பர்சனல் ஃபினான்ஸ்
வங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆர்பிஐ 6 மாதங்கள் கடன் திட்டங்களின் தவணை செலுத்த அவகாசம் வழங்கியது.
ஆர்பிஐ வழங்கிய இந்த தவணை செலுத்துவதற்கான அவகாசம் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பிறகு, 6 மாத தவணைக்கும் சேர்த்து வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று கூறியது சர்ச்சை ஆனது.
பின்னர் அதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தில் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
முதலில் அதற்குச் சாக்குப்போக்கு சொல்லித் தவிர்த்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் அலுத்ததால் பணிந்தது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்தக் கால அவகாசம் பெற்றவர்கள் செலுத்த வேண்டிய வட்டிக்கு வட்டி மற்றும் அப்போதும் கடன் தவணையைத் தவறாமல் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் சலுகையை வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 2020 மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலகட்டத்தில், 2 கோடி ரூபாய்க்குக் கீழ் கடன் பெற்று அதற்கான தவணையைத் திருப்பி செலுத்த அவகாசம் பெற்றவர்கள் மற்றும் செலுத்தியவர்களுக்குச் சலுகை வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் இந்த கடன் திட்டங்களின் வட்டி தள்ளுபடி தனிநபர்கள் பெற்ற பர்சனல் லோன், வாகன கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், தவணை முறையில் வாங்கிய ஏசி, பிரிட்ஜ் என அனைத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு குறு நிறுவனங்களும் 2 கோடி ரூபாய்க்கு கடன் பெற்று இருந்தால் இந்த வட்டி தள்ளுபடி சலுகையைப் பெற இயலும்.
மத்திய அரசின் இந்த கடன் திட்டங்களின் வட்டி வட்டி மற்றும் வட்டி தள்ளுபடி அறிவிப்பால், 6,500 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கண்டிப்பாக வங்கியில் கடன் பெற்றவர்களுக்கான ஒரு தீபாவளி பரிசாகதான் இருக்கும்.



















