வணிகம்
விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

விமான டிக்கெட் ரத்து செய்த ஒருபயணி, ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளம் அதிகப்படியான ரத்து கட்டணம் வசூலித்ததாக குற்றம்சாட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, விமான நிறுவனம் காட்டிய ரத்து கட்டணத்துக்கும், மூன்றாம் தரப்பு புக்கிங் தளம் வசூலித்த தொகைக்கும் இடையிலான பெரிய வித்தியாசம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அந்த பயணி, அகாசா ஏர் விமான டிக்கெட்டை ஒரு மூன்றாம் தரப்பு தளத்தின் மூலம் முன்பதிவு செய்ததாக கூறியுள்ளார். ஆனால் முன்பதிவு செய்யும்போது தவறுதலாக மும்பைக்கு பதிலாக நவி மும்பையை தேர்வு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் டிக்கெட்டை ரத்து செய்ய முயன்றபோது, அந்த தளம் ரூ.4,764 ரத்து கட்டணமாக பிடித்தம் செய்து, ரூ.1,571 மட்டுமே திருப்பித் தரப்படும் என்று காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பயணி, நேரடியாக விமான நிறுவனத்தின் இணையதளத்தில் ரத்து விவரங்களை சரிபார்த்துள்ளார். அப்போது, விமான நிறுவனம் வெறும் ரூ.299 மட்டுமே ரத்து கட்டணமாக காட்டியதுடன், ரூ.6,076 திருப்பித் தரப்படும் என தகவல் வந்ததாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், விமான நிறுவன வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளும் ரத்து கட்டணம் ரூ.299 மட்டுமே என உறுதி செய்ததாகவும், ஆனால் மூன்றாம் தரப்பு தளத்தின் மூலம் முன்பதிவு செய்யப்பட்டதால், பணத்தை திருப்பி வழங்குவது அந்த தளத்தின் மூலம் தான் நடைபெறும் என தெரிவித்ததாகவும் பயணி கூறியுள்ளார்.
விமான நிறுவனம் வசூலிக்கும் உண்மையான ரத்து கட்டணத்தை விட சுமார் 15 மடங்கு அதிகமாக கட்டணம் பிடித்தம் செய்வது “நியாயமற்றது” என்றும், ஆன்லைன் புக்கிங் தளங்கள் தங்களது கட்டண விவரங்களில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த பயணி வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களுக்கு ஏற்பட்ட இதேபோன்ற அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு பயனர், “எனக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது. நான் MMT மூலம் முன்பதிவு செய்திருந்தேன். பின்னர் நேரடியாக விமான நிறுவனம் மூலம் ரத்து செய்தேன்,” என பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “DGCA விதிப்படி, முன்பதிவுக்குப் பிறகு 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் முழு தொகையும் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நிறுவனங்கள் பொதுமக்களின் கடின உழைப்புப் பணத்தை தவறாக பயன்படுத்துகின்றன. எனது ஒரு விமானத்தை விமான நிறுவனம் தானாகவே ரத்து செய்தபோதும், பணத்தை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது,” என மற்றொரு நபர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் ஒருவர், “அதனால்தான் நான் எப்போதும் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்கிறேன். மூன்றாம் தரப்பு தளங்களை வெறும் விலை ஒப்பீட்டிற்காக மட்டுமே பயன்படுத்துவேன். நேரடி முன்பதிவு செய்தால் தேவையற்ற குழப்பங்களும் மறைமுக கட்டணங்களும் தவிர்க்கப்படலாம்,” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட பயணியின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட அனுபவமாகும்; அவை தனியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
















