ஆன்மீகம்
வரலட்சுமி விரத சிறப்புக்கு ஸ்பெஷல் தேங்காய் போளி செய்வது எப்படி? எளிய செய்முறை இதோ!

வரலட்சுமி விரதத்திற்கு சிறந்த நைவேத்யமாக தேங்காய் போளி!
2025 ஆம் ஆண்டின் வரலட்சுமி விரதம், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 8ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் வரலட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வம், சௌபாக்கியம், ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்வு பெறலாம். இந்த விரத நாளில் நைவேத்யமாக செய்யக்கூடிய மிகவும் சுவையான இனிப்பானது தேங்காய் போளி.
பலர் இந்த போளியை செய்வது சிக்கலான காரியமாக நினைத்துக் கொள்வர். ஆனால், ஒரு மணி நேரம் மேல் மாவை ஊறவைத்துவிட்டால், 10 நிமிடத்தில் இந்த இனிப்பு ரெடி செய்ய முடியும். இந்த தேங்காய் போளி செய்முறை முற்றிலும் எளிதானது. வீட்டிலிருந்தே செய்து உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கலாம்.
✅ தேவையான பொருட்கள்:
மேல் மாவுக்கு:
மைதா – 1 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன் + 2 1/2 டேபிள் ஸ்பூன்
உள்ளே வைக்க:
பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 1 கப்
தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
👩🍳 செய்முறை:
முதலில் மேல் மாவுக்காக மைதா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கைகளால் கிளறவும்.
அதில் தண்ணீரை சேர்த்து மென்மையான மாவாக பிசையவும்.
பிசைந்த பிறகு 1.5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
பிறகு மீதமுள்ள எண்ணெய் ஊற்றி 1 மணி நேரம் மூடிப் போடவும்.
பாசிப்பருப்பை குக்கரில் வேக வைத்து எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை தண்ணீரில் கரைத்து அதில் வேகவைத்த பருப்பு, தேங்காய் சேர்த்து கிளறவும்.
அதில் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பில் கிளறி இறக்கவும்.
இந்த பூரணத்தை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மைதா மாவை சிறு உருண்டையாக எடுத்து வாழையிலையில் தட்டி பூரண உருண்டையை வைக்கவும்.
மூடி கைகளால் மெதுவாக தட்டிக்கொண்டு தோசைக்கல்லில் பொன்னிறமாகச் சுடவும்.



















