இந்தியா
காஷ்மீர் விவகாரத்தில் உச்சக்கட்ட கோபத்தில் மாநிலங்களவையில் கொந்தளித்த வைகோ!

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, இதற்கு எதிராக மாநிலங்களவையில் உச்சக்கட்ட கோபத்தில் கொந்தளித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பை கேட்ட அடுத்த நொடியிலேயே மாநிலங்களவையில் அமளி வெடித்தது. எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக காஷீர் பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
அவர் தனது உரையில், இந்திய ஜனநாயக வரலாற்றில் இந்த நாள் இரத்தக் கண்ணீரை வடிக்கச் செய்த நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள். இந்த மசோதா, காஷ்மீர் மக்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. சற்று நேரத்துக்கு முன்னர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார்.
பாஜக உறுப்பினர்கள் அவரை தாக்கினர். மாநிலங்களவை அவை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர். இன்றைக்கு நசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் லட்சக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு லட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்.
இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது, சர்வதேச பிரச்சினையாகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு திறமையான குள்ளநரி. கொசாவோ பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். சூடான் பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். கிழக்கு தைமூர் பிரச்சினை போல் பிரச்சினை ஆகும். ஐநா மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும் தலையிடும்.
இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்களை வரலாறு மன்னிக்காது. இந்த பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறை பாஜக செய்துவிட்டது. இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன் என கோபம் கொப்பளிக்க பேசினார் வைகோ.

















