சினிமா செய்திகள்
சினிமா துறையை முடித்துக் கட்டிய உதயநிதி?
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையை முடித்துக் கட்டிவிட்டார் என பேசியுள்ளார்.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் நிலவிவந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரம் தற்போது தான் சூடுபிடித்துள்ளது. அனல் பறக்கும் பிரச்சாரத்தின் மத்தியில் தொகுதிக்கு உட்பட்ட வேப்பம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்து அமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள். உதயநிதியும், ஸ்டாலினும் எவ்வளவு வேடிக்கை காட்டுகிறார்கள். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின் எல்லா திரைப்படங்களையும் வாங்கி வெளியிடுகிறார். இவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி பல கோடிகளை கொள்ளையடிக்கிறார்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 150 திரைப்படங்கள் இவர்களால் முடங்கி கிடக்கின்றன. சினிமா துறையையே முடித்துக் கட்டிவிட்டார்கள் என்றார். முன்னதாக ஸ்டாலினும், அமைச்சர் மா.சுப்பிரமணியும் வாக்கிங் போகும் போது நாட்டு பிரச்சனைகளை பற்றி பேசாமல், அவரது மகன் நடித்த படம் எப்படி ஓடுகிறது என்று கேட்கிறார் என குறிப்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.