தமிழ்நாடு
அமமுகவினர் அதிமுகவுடன் தொடர்பு வைத்திருக்க கூடாது: எச்சரிக்கும் தினகரன்!

அமமுகவை சேர்ந்தவர்கள் யாரும் எந்த காரணத்துக்காகவும் ஆளும் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுக, திமுக என இரண்டு கட்சியினரும் அமமுகவினரை தங்கள் பக்கம் இழுத்து வந்தனர். இதனால் தினகரனின் அமமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது.
அதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 2000 பேர் அமமுகவில் இணைந்த அந்த நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன், அமமுகவை சேர்ந்தவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருப்பதில்லை. ஆனால் திருநெல்வேலியில் சிலர் ஆளும்கட்சியுடன் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களை கண்டித்திருக்கிறேன்.
எத்தனையோ பேர் ஆளும்கட்சி காரர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் செல்வதும், அமைச்சர்களுடன் சுமூகமாக உறவு வைத்துக்கொண்டும் இருக்கின்றனர். நமக்கு எப்படி திமுக எதிரியோ, அப்படி இந்த துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும். அமைச்சர் பத்திரிகை கொடுத்ததால் சென்றோம் என காரணம் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாம் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறதா? வரும் வழியில் கூட பேனர்களை அகற்றியுள்ளனர். யார் யாரெல்லாம் ஆளும் கட்சியினருடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என கட்சி தாண்டி நண்பர்கள் மூலமாக எனக்கு தெரியும். அம்மாவுடன் 30 ஆண்டுகள் அரசியலில் பயணித்தவன் என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் அறிந்து, புகார்கள் இருப்பின் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத் தெரியும் என எச்சரித்தார்.
















