ஆன்மீகம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ள புதிய தங்கும் விடுதி மற்றும் இளைப்பாறும் மண்டபங்கள்

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சைவத் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு மலையை வலம் வந்து இறைவனை வணங்குவது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி பிரதோஷம் மற்றும் கிருத்திகை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் இங்கு கிரிவலம் வருகின்றனர்.
சமீப நாட்களாக இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே வருகிறது. வரும் பக்தர்கள் தங்கிடவும் இளைப்பாறவும் தனியார் நடத்தும் விடுதிகள்தான் உள்ளன. அவற்றில் சில காலங்களாக கட்டணக் கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் படும்பாடு வார்த்தைகளால் சொல்ல இயலாத அளவில் உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் ஏழு இடங்களில் இளைப்பாறும் மண்டபங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக ஒரு தங்கும் விடுதியை அமைக்கவும் அரசு முடிவு செய்து உள்ளது.
அதன்படி, கிரிவலப்பதையில் சோணாதி தோப்பு அருகில், ரூ.64.30 கோடியில் 2,10,531 சதுர அடி பரப்பளவில் 476 பேர் தங்கும் வகையில் புதிய தங்கம் விடுதி அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதில் 2 நபர்கள் தங்கம் வகையில் 128 அறைகளும், 6 நபர்கள் தங்கும் வகையில் 24 அறைகளும், 10 நபர்கள் தங்கும் வகையில் 6 அறைகளும் அமைக்கப்பட உள்ளன. நான்கு தளங்கள் கொண்ட குடியிருப்பு வடிவிலான 8 வில்லாக்கள் கொண்ட இந்த விடுதி அறைகள் குளிர்சாதன வசதி, லிப்ட், பார்க்கிங் வசதி, உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஒரே இடத்தில் இருக்கம் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இதேபோல், கிரிவலப்பதையில் 14 இடங்களில் ரூ.22.11 கோடி மதிப்பில் 98367 சதுர அடி வரப்பில் 213 கழிவறைகள், 52 குளியலறைகள், 24 மாற்றத் திறனாளிகளுக்கான கழிவறைகள், 213 இடங்களில் சிறுநீர் கழிப்பிட வசதிகள் அமைக்கப்படுகின்றன.
ஒரு மண்டபத்தில் 550 நபர்கள் இளைப்பாறும் வகையில் மொத்தம் 7 இடங்களில் 61766 சதுர அடி பரப்பளவில் இளைப்பாறும் மண்டபங்கள் அமைத்திடவும் நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியும் வழங்கப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என நகராட்சி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.













