சினிமா செய்திகள்
தியேட்டர் உரிமையாளர்கள் போடும் புது கண்டிஷன்!- திரைப்படங்களை வெளியிட புது சிக்கல்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர்கள் புது கண்டிஷன் ஒன்றை விதித்துள்ளதன் மூலம் திரைப்படங்கள் வெளியீட்டுக்குப் பது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்கள் கொரோனாவுக்குப் பின் வெளியாகத் தொடங்கி உள்ள நிலையில் ஓடிடி-யில் வெளியிடுவது, திரை அரங்கங்களில் வெளியிடுவது எனப் பல குழப்பங்களும் போராட்டங்களும் தினமும் தொடர் கதையாகி உள்ளன. சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி-யில் நேரடியாக வெளியான போது தியேட்டர் உரிமையாளர்கள் கொந்தளித்துவிட்டனர்.
அதன் பின்னர் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் புது கண்டிஷன் போட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒரு சினிமா தியேட்டரில் வெளியானால் அடுத்த 30 நாட்களுக்குப் பின்னரே ஓடிடி தளத்தில் வெளியிடப் பட வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கண்டிஷன் விதித்துள்ளனர்.
இதனால் தற்போது பிப்ரவரி 12-ம் தேதி வெளியாக இருந்த நடிகர் சமுத்திரகனியின் ‘ஏலே’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், தியேட்டரில் 12-ம் தேதியும் ஓடிடி தளத்தில் 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏலே படத்துக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.