தமிழ்நாடு
இன்று முதல் டீ, காபி விலை உயர்வு: சென்னை, மதுரையில் என்ன விலை?
இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டீ, காபி விலை உயர்த்தப்படும் என தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும், கேஸ் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு உயர்வு காரணமாக டீ கடை நடத்துபவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றார்கள்.
குறிப்பாக சமீபத்தில் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் விலை உயர்வு டீ கடை உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை மற்றும் பால் விலை உயர்வால் சென்னையில் டீ விலை 12 முதல் 15 வரை உயர்த்தப்படும் என தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் காபி விலையும் ரூபாய் 20 வரை உயர்த்தப்படும் என தெரிகிறது.
மதுரையிலும் தேனீர் விலை ஒரு கப் 15 என உயர்த்தப்படும் என மதுரை தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பால் விலை, கேஸ் விலை உயர்வு காரணமாக விலை டீ விலை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் டீ, காபி பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.