இந்தியா
வைகோ எம்பியாக பதவியேற்க சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிப்பு: மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்கு பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் வாய்ப்பை கொடுத்தது. அதன்படி வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைகோ ஒரு ஆண்டு சிறை தண்டனை மட்டும் பெற்றுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை.
இந்நிலையில் வைகோவுக்கு பதவிபிரமாணம் செய்து வைக்க கூடாது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஏற்கனவே மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் வைகோ உள்ளிட்ட தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பேரும் அடுத்த வாரம் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் வைகோ நேற்று முன்தினம் இந்தி மொழிக்கு எதிராக ஒரு பேட்டி அளித்தார். அது வட இந்திய ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதை காரணமாக வைத்து வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க கூடாது என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், இந்தி வளர்ந்த மொழியல்ல, இந்தியில் இலக்கியமாக வெளியிடப்பட்ட ஒரே புத்தகம் ரயில்வே நேர அட்டவணைதான் எனவும் வைகோ கூறியிருக்கிறார். இது அனைத்து இந்தியர்களையும் மோசமாக இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆங்கிலத்தில் மட்டும்தான் பேச வேண்டும் என வலியுறுத்தி, இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றான இந்திக்கு களங்கம் விளைவித்துள்ளார். சமஸ்கிருத சொல்லகராதிதான் இந்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சமஸ்கிருதம் செத்துப்போன மொழி, அதனை படிப்பது பயனற்றது என்றும் வைகோ விமர்சித்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் இழிவுபடுத்தியுள்ளார் வைகோ.
மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது அரசியல் சாசனத்தை நிலைநிறுத்துவேன் என்று தான் எடுத்த சத்திய பிரமாணத்தை வைகோ மீறியுள்ளார். இது கடும் ஆட்சேபத்திற்குரியது, எனவே வைகோ மாநிலங்களவை உறுப்பினராக இடம்பெறுவது குறித்து தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

















