வைரல் செய்திகள்
100 கார்களில் வந்திறங்கிய தாய்மாமன் சீர்… தங்கை மகள்களுக்காக ஊரையே மிரள வைத்த மாமன்!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே தாய்மாமன் ஒருவர் தனது தங்கை மகள்களுக்காக கொண்டு வந்த சீர் ஊரையே மிரளச் செய்யும் அளவில் வந்து இறங்கியுள்ளது. இந்த தாய்மாமன் சீர் தற்போது சமுக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
ஈரோட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் மருத்துவர் ஆகப் பணியாற்றி வருகிறார். இவரது தங்கைக்கு இரண்டு மகள்கள். இரு மகள்களின் பூப்புனித நீராட்டு விழாவையும் ஒன்றாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தக் காலத்தைப் போல வண்டி கட்டிக் கொண்டு தாய்மாமன் சீர் எடுத்துக் கொண்டு விழாவுக்கு வந்துள்ளார் தாய் மாமன் ராஜா.
சீர் என்றால் ஒரு ஊரே மலைத்துப் போகும் அளவுக்கு 100 கார்களில், 15 மாட்டு வண்டிகளில், 20 குதிரை வண்டிகளில் சீர் வந்து இறங்கியுள்ளது. உணவுப் பதார்த்தங்கள், தானியங்கள், காங்கேயம் காளைகள், வெள்ளாடுகள், பல ரக சமையல் பாத்திரங்கள், விளக்குகள் என அள்ளிக் கொண்டு சீர் ஆகத் தந்துள்ளார் ராஜா.
இத்தனையையும் அள்ளிக் கொண்டு கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து கள்ளிப்பட்டியில் விழா நடக்கும் விவசாயத் தோட்டம் வரையில் மருத்துவரான ராஜா மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார்.இதனால் அப்பகுதியே ஸ்தம்பித்துவிட்டதாம். விழாவுக்கு வந்திருந்த அத்தனை விருந்தினர்களுக்கும் பாரம்பரிய உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவே பாரம்பரிய முறையில் பித்தளைப் பாத்திரங்களில் சமைத்து விருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
தனது சீர் வரிசைகளால் மிரட்டிய தாய்மாமன் ராஜா கூறுகையில், “நமது பழக்க வழக்கத்தையும் பாரம்பரியத்தையும் மறக்கக் கூடாது என்பதற்காகவும் இதை எல்லாம் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் வழக்கப்படி தங்கை மகள்களுக்கு சீர் செய்தேன்” என்று கூறியுள்ளார்.