தமிழ்நாடு
பிரச்சாரத்தில் சீமான் சர்ச்சை பேச்சு: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய புகார்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு நிகராக மல்லுக்கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் SC, ST பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் புகார் அளித்துள்ளது.
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்காக விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்து பூர்வகுடி தமிழர்களாக வாழ்ந்து வரும் அருந்ததியர் இன மக்களை சீமான் இழிவுபடுத்தியதாக கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அருந்ததியினர் கூட்டமைப்பு, தலித் விடுதலை இயக்கம், ஜெய் பீம், ஆதித்தமிழர் பேரவை, பகுஜன் சமாஜ், விடுதலை வேங்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் ஈரோடு காவல் கண்காணிப்பாளரை சந்தித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் விதிகளை மீறி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்து, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்கவும், அவரது வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினர். மேலும் அவர் மீது SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.