தமிழ்நாடு
கொடநாடு எஸ்டேட் எங்களுக்கு கோவில்: சசிகலா அறிக்கை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து கடந்த இரண்டு நாட்களாக சசிகலாவிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில் விசாரணை முடிந்தவுடன் சசிகலா நீண்ட அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கொடநாடு எஸ்டேட்டை நாங்கள் கோவிலாகத்தான் பார்க்கின்றோம் என்றும் அங்கு நடைபெற்ற கொலை, கொள்ளையில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ள முழு விவரங்கள் இதோ:
காவல்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து இருக்ஒிறேன். முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்இறேன்.
கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம், ஆனால் என்னை பொருத்தவரை, என் அக்கா அவர்கள் மிகவும் நேசித்த இடம், அவர்களுக்கு நிறைய மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் உண்டு என்றால் அது கோடநாடுதான். எங்களை பொருத்தவரையில் கோடநாடு பங்களாவை ஒரு கோயிலாகத்தான் பார்த்தோம். எங்கள் கட்சிக்காரர்களும் அப்படிதான் பார்த்தார்கள்.
இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில், விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நானும் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளையும் நடந்துள்ளது. அதோடுமட்டுமல்ல, இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக மரணம் அடைந்துள்ளார்கள். இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவரது தாயும் பலியாகி உள்ளனர்.
எனவே காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த ஒன்றுமே அறியாத அப்பாவிகளாக எங்களது காவலாளி ஓம் பகதூர், பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.