தமிழ்நாடு
பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா இன்று ஆஜர்: மீண்டும் சிறை தண்டனையா?
பெங்களூரு பார்ப்பன அகரஹார நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்தபோது சொகுசாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெங்களூரு ஊழல் தடுப்புப் பிரிவினர் சசிகலா இளவரசி மீது குற்றப் பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சசிகலா இளவரசி உட்பட 7 பேரும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
இந்த உத்தரவை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சசிகலா மற்றும் இளவரசி நேற்று கார் மூலம் பெங்களூர் சென்றதாக கூறப்படுகிறது. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்றும் வழக்கின் விசாரணை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்றும் தெரிகிறது .
இந்த வழக்கின் முடிவில் சசிகலா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மீண்டும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.