தமிழ்நாடு
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வேலூர், திருப்பத்தூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் மே 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதால் நாளை மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.