தமிழ்நாடு
கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டை பூட்டிய வங்கி: ஒருவாரமாக தவிக்கும் விவசாயி குடும்பம்!

ஒருபக்கம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் விவசாயி ஒருவர் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்பதற்காக அவருடைய வீட்டை பூட்டி சீல் வைத்த பேங்க் நிர்வாகத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உடல்நிலை பிரச்சினை மற்றும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயி ஒருவர் தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பலமுறை கடனை செலுத்த கூறிய வங்கி நிர்வாகம் திடீரென கடந்த வாரம் அவருடைய வீட்டை பூட்டி சீல் வைத்தது. இதனையடுத்து தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் பூட்டிய வீட்டின் முன் அந்த விவசாயி ஒரு வாரமாக உட்கார்ந்து இருக்கிறாராம்.
மனைவி மற்றும் மகள்களுடன் உடைகள் கூட மாற்ற முடியாமலும் மகள்கள் படிக்க புத்தகம் இன்றியும் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் உடனடியாக அரசு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
விவசாயி மகள்களின் படிப்பை கணக்கில் கொண்டாவது வங்கி நிர்வாக மனிதாபிமானத்துடன் நடந்து இருக்கலாம் என்றும் உடைமாற்ற கூட முடியாத அளவுக்கு வீட்டை பூட்டி சீல் வைத்த தனியார் வங்கி நிர்வாகத்திற்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

















