இந்தியா
அதானி விவகாரத்தால் முடங்கிய நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க மறுக்கப்பட்ட நிலையில் 4-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி செய்து நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்த மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நேற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திருணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தனர். பின்னர் அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட அவர்கள் அதானி நிறுவனத்திற்கு எதிராக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை வைத்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் பின்னர் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் முடங்கியதால் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவில்லை.