தமிழ்நாடு
அடுத்த கல்வியாண்டில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் சனிக்கிழமை இயங்குமா என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் இருபத்தி மூன்று வகை சான்றிதழ்களை இணையதளம் மூலம் தொடங்கும் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து அவர் அடுத்த கல்வி ஆண்டிற்கான நாள்காட்டியை வெளியிட்டார். இந்த நாள்காட்டியில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகள், காலாண்டு அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதிகள் ஆகியவை உள்ளன என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த விபரங்கள் அனைத்துமே பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என்றும் மாணவர்கள் அதில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதிக விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் பள்ளி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும் ஆனால் அடுத்த கல்வி ஆண்டில் சனிக்கிழமை முழுவதுமாக விடுமுறை விடப்படும் என்றும் தேவைப்பட்டால் மட்டுமே சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.