தமிழ்நாடு
யூடியூபில் ஒரே ஒரு வீடியோ: ரூ.300 கோடி அபேஸ் செய்த கோவை நபர்!
யூடியூபில் வீடியோ அப்லோட் செய்து ரூபாய் 300 கோடி வரை மோசடி செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
கோவையை சேர்ந்த விமல் குமார் என்பவர் மிஸ்டர் மணி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார் . இந்த சேனலில் லைவ்வில் பேசும் நிகழ்ச்சியை நடத்திய விமல் குமார் பாரக்ஸ் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் இதில் முதலீடு செய்யும் நபர்களுக்கு மாதம் 8 சதவீதம் ஊக்கத்தொகையாக வட்டி வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அவரது கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி பலர் முதலீடு செய்தனர். கோவையில் மட்டுமன்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் முதலீடு செய்ததை அடுத்து ரூபாய் 300 கோடி வரை விமல் குமார் திரட்டியதாகத் தெரிகிறது .
இந்த நிலையில் மாதம் மாதம் கொடுக்க வேண்டிய வட்டி சரியாக வராததை அடுத்து சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரது அலுவலகத்தில் சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து முதலீட்டாளர்கள் கோவை கமிஷனர் அலுவலகம் சென்று புகார் அளித்தனர். விமல் குமாரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்து உள்ளனர். யூடியூப் வீடியோ மூலம் 300 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிய விமல் குமாரை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.