இந்தியா
பி.எஸ்.என்.எல்-ஐ நோக்கி செல்லும் வாடிக்கையாளர்கள்: டுவிட்டரில் டிரெண்ட்!
தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் திடீரென பிஎஸ்என்எல் நோக்கி செல்வதாக ட்விட்டரில் ட்ரென்ட் ஒன்று உருவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் குறைக்கப்பட்டது என்பதும் இன்டர்நெட் இலவசமாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது திடீரென ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய நிலையில் வோடபோன் நிறுவனமும் உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ஜியோ பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ நோக்கி வாடிக்கையாளர்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ப்ரீபெய்டு உள்ளிட்ட அனைத்து சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறுவோம் என நெட்டிசன்கள் டுவிட்டரில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
இந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தால் நிச்சயம் ஒரு பெருங்கூட்டம் பிஎஸ்என்எல்-ஐ நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.