தமிழ்நாடு
மக்கள் பணத்தை 400 கோடி ரூபாயை ஏப்பம் விட்டு வெளிநாடு தப்பிச்சென்ற கோவை தம்பதி!
கோவை மாவட்டம் குறிஞ்சி நகரில் வசிக்கும் விமல் குமார் மற்றும் இவரது மனைவி ராஜேஸ்வரி தம்பதி இணைந்து ஆல்பா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். மேலும் மிஸ்டர் மணி என்ற யூடியூப் சேனலை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிதி முதலீடு, அந்நிய செலாவணி தொடர்பாக கருத்தரங்கு நடத்துவது இவர்களது வழக்கம். அப்போது தங்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 10 மாதங்களுக்கு தொடர்ந்து 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
மேலும் புதிய முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்துவோருக்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை நம்பி அவரிடம் ஆயிரக்கணக்கானோர் 400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது .
ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு அசல், வட்டி, ஊக்கத்தொகை என எதையும் தராமல் 10 மாதங்களுக்கு முன் வீடு அலுவலகத்தை காலி செய்துவிட்டு இந்த தம்பதி தலைமறைவாகிவிட்டனர். அவரால் பாதிக்கப்பட்ட 250 பேர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர் .
மேலும் தற்போது தலைமறைவாக இருந்தபோதிலும் யூடியூப் சேனல் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பாலகுமார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவான தேடிவருகின்றனர். விமல்குமார் மற்றும் அவரது மனைவியும் வெளிநாடு தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.