இந்தியா
காஷ்மீர் விவகாரத்தில் பொங்கிய வைகோவை பாராட்டிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பாக பேசியதாக வைகோவை பாராட்டியதாக மதிமுக தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் நேற்று பாஜக கொண்டு வந்த காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதாவை எதிர்த்து கடுமையாக உரையாற்றினார். அவரது பேச்சில் அனல் பறந்தது. உச்சக்கட்ட கோபத்தில் வைகோ உரையாற்றியது நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் மதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மன்மோகன் சிங், வைகோ சந்திப்பின்போது, மிஸ்டர் வைகோ, எனக்கு 86 வயது ஆகின்றது. நான் உங்களுடைய மூத்த அண்ணன். நீங்கள் என்னுடைய இளையதம்பி. என் குடும்பத்தில் ஒருவர். உங்களைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது.
நேற்று நீங்கள் மாநிலங்கள் அவையில் உரையாற்றியதைப் பார்த்தேன். அருமையாக இருந்தது. உங்கள் குடும்பத்தோடு என் வீட்டுக்கு விருந்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னையில் தன்னுடைய புத்தகத்தை வெளியிட்டு பேசிய வைகோ, மன்மோகன் சிங் பாராட்டியதை நினைவு கூர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்தார்.

















