உலகம்
ஒரு வேலையும் செய்யாமல் ரூ.1 கோடி சம்பளம்: வழக்கு தொடர்ந்த ஊழியர்!
தான் ஒரு வேலையும் செய்யாமல் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகவும் தனது திறமைக்கேற்ற வேலை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அயர்லாந்து நாட்டிலுள்ள ஐரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராக மில்ஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது வேலை குறித்து கூறிய போது நான் தினமும் அலுவலகத்திற்கு சென்று கணினியை இயக்குவேன் என்றும், அதில் இமெயில் ஏதும் வந்திருக்கிறதா என்று சோதிப்பேன் என்றும் ஆனால் பெரும்பாலும் இமெயில் எதுவும் எனக்கு வந்திருக்காது என்றும் அது தொடர்பாக எந்த வேலையும் எனக்கு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சக பணியாளர்கள் கூட தனக்கு எந்தவித தகவலை அனுப்ப மாட்டார்கள் என்றும் வாரத்துக்கு ஐந்து நாட்களில் இரண்டு மட்டுமே அலுவலகம் சென்றாலும் அந்த இரண்டு நாட்களில் கூட தனக்கு எந்த வேலையும் இல்லாமல் வீடு திரும்பினேன் என்றும் தெரிவித்துள்ளார். அலுவலக நேரத்தில் நான் இரண்டு செய்தித்தாள்களை வாசிப்பேன் என்றும் சாண்ட்விட்ச் சாப்பிட்டுவிட்டு ஒரு வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பி விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனது திறமையை நிரூபிக்கும் வகையில் வேலை அளிக்க நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்றும் ஆனாலும் தனக்கு எந்த விதமான பணியும் இல்லை என்றும் தனது திறமையை நிரூபிக்க நிறுவனம் எந்த ஒரு வேலையும் தனக்கு தரவில்லை என்பதால் வழக்கு தொடர உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்த விசித்திரமான வழக்கால் நீதிபதி ஆச்சரியம் அடைந்து உள்ளார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது.