வணிகம்
80% சந்தையை இழந்த மேகி… ரூ.450 கோடியில் மீண்டும் செம்ம கம்பேக்!

2015 ஆம் ஆண்டு, இந்தியாவில் நூடுல்ஸ் பிராண்ட் உலகத்தை உலுக்கிய ஒரு அதிர்ச்சி சம்பவம் – மேகி நூடுல்ஸ் தடைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 80% சந்தை பங்கும், 90% விற்பனையும் சில வாரங்களில் சீர்குலைந்து விட்டது. 30,000 டன் மேகி நூடுல்ஸ்கள் திரும்ப பெறப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் காரணமாக நெஸ்லே இந்தியா தனது 15 ஆண்டுகளில் முதன் முறையாக ₹64.4 கோடி நட்டத்தை சந்தித்தது.
மேகியின் மீது காரணம் – அதிக காரீயச்சத்து (Lead) மற்றும் தவறான “MSG சேர்க்கப்படவில்லை” எனும் லேபிள்கள். உத்தரப்பிரதேச அரசு எடுத்த சாம்பிள்களில் குறைவான தரத்தைக் கண்டறிந்ததும், FSSAI நாடு முழுவதும் தடையை விதித்தது.
இந்நேரத்தில் நெஸ்லே உணர்ந்தது – மேகி என்பது வெறும் பிராண்ட் அல்ல. அது மனநிலை சார்ந்த உணர்வுப் பிணைப்பு கொண்ட உணவு. ஹாஸ்டல் நாட்கள், மாலை நேர சிற்றுண்டி, குழந்தைப் பருவ நினைவுகள் எல்லாம் அதனுடன் சேர்ந்தே இருந்தது. இதைத்தான் நெஸ்லே மீட்சி முயற்சியில் பயன்படுத்தியது.
நெஸ்லே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆய்வகங்களில் 3,500 மேகி சாம்பிள்களை சோதனைக்குப் படுத்தியது. அனைத்து சோதனைகளும் மேலான தரத்தைக் காட்டின. இதில் நம்பிக்கை பெற்ற பின், அவர்கள் முழுமையான PR களத்தில் இறங்கினர் – முழுப் பக்கம் விளம்பரங்கள், சமூக ஊடக பிரசாரங்கள், தயாரிப்பு வீடியோக்கள், உண்மைகள் சார்ந்த விளக்கங்கள், மற்றும் #WeMissYouToo போன்ற உணர்வுப்பூர்வ பிரசாரங்கள்.
மேகியின் மீள்பிரவேசம் ஆன்லைனில் ஸ்நாப்டீல் மூலம் தொடங்கப்பட்டது. இதற்குப் பிறகு, அனைத்து சந்தைகளிலும் விரிவாக விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 2016-க்குள் சந்தை பங்கில் 50% மீட்பு நிகழ்ந்தது; 2017 இறுதியில் இது 60% ஐ கடந்தது.
இந்த மீட்சி பயணத்தில் நெஸ்லே ₹450 கோடிக்கும் அதிகம் முதலீடு செய்தது. உண்மை மற்றும் அறிவியலுடன் உணர்வுகளை கலந்து மக்களை மீண்டும் நம்பவைத்தது. இன்று, இந்தியா தான் மேகி நூடுல்ஸ்களுக்கு உலகளாவிய பெரிய சந்தையாக இருக்கிறது.

















