செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அறிவிப்பு – உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் தொகை வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை (Magalir Urimai Thogai) குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
“உங்களுடன் ஸ்டாலின் முகாம்” மூலம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து விடுபட்டவர்களிடமிருந்து மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இவ்விண்ணப்பங்கள் தற்போது படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம்கள் மூலம், நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் மக்கள், சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆதார் திருத்தம் போன்ற பல்வேறு அரசு சேவைகளை தங்கள் ஊரிலேயே எளிதாகப் பெறுகின்றனர்.
ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 45 நாட்கள் நிறைவடைந்த நிலையில், முதல் கட்ட பயனாளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
“மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி 20 இலட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. புதியதாக விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். ஒரிரு மாதங்களில் புதிய பயனாளிகளும் இத்தொகையைப் பெறுவார்கள்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களைப் பற்றியும் அவர் கூறியதாவது:
“திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும், அதில் முதல் தொகுதியாக வேடசந்தூர் திகழும்,” எனவும், “எடப்பாடி பழனிச்சாமி யாரை பார்த்தாலும் அமித்ஷா முகம் தான் தெரிகிறது” என்றும் விமர்சித்தார்.






















