சினிமா செய்திகள்
பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்கிறார் இளையராஜா!
இசைஞானி இளையராஜா இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தியானம் செய்த பின்னர் இசை கருவிகளை எடுப்பதற்காக பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லப் போகிறார்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பிரசாத் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை இசைஞானி இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்திருக்கிறார்.
தற்போது அந்தப் பகுதியை பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாகம் இளையராஜாவிடம் திருப்பிக் கேட்டு இருந்தது. இதனையடுத்து இளையராஜாவிற்கும், பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
எனவே இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்கும் அவரது இசைக் கருவிகளையும் இசை குறிப்புகளையும் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
நீதிமன்றம் அதற்கான ஒப்புதலை அளித்ததன் பேரில் இன்று காலை தியானத்துக்கு பின் அங்கு சென்று மாலை நான்கு மணி வரை அவரது பொருட்களை எடுத்து வர அனுமதி கிடைத்துள்ளது.