தமிழ்நாடு
பழுதான சாலை… சுங்க கட்டணம் 50% மட்டுமே வசூலிக்க வேண்டும் – நீதிமன்றம் கறார் உத்தரவு!

மதுரவாயல் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிலையில், பழுதான நெடுஞ்சாலைகளைச் சரிசெய்யும் வரை 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம், சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்ற புகாரரை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வரும் சாலைகள் அனைத்தும் இந்திய சாலை காங்கிரஸ் அமைப்பு கூறிய விதிகளின் தரத்தில் இல்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலை பழுதடைந்த நிலையில், அதனை சரி செய்வதில் ஏன் காலதாமதம் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் பதிலளிக்கையில், 10 நாட்களில் பழுது பார்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



















