தமிழ்நாடு
பாடப் புத்தகத்தில் ரஜினி: வலுக்கும் எதிர்ப்பு!

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஜூர்னலிஸ்ட் யூனியன் கோவைக்கிளையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் பெரும் பணக்காரர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் உயர்ந்தவர்கள் பற்றிய Rags to riches story என்ற பாடம் ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ளது. அதில், பேருந்து நடத்துனராக இருந்து பின் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார குறியீடாகவும் ரஜினிகாந்த் திகழ்கிறார் என்று குறிப்பிட்டு ரஜினியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு ஜூர்னலிஸ்ட் யூனியன் கோவைக்கிளை, பாட புத்தகத்தில் இருந்து ரஜினியின் வரலாற்று பாடத்தை உடனே நீக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் வழக்கு போடுவோம் என எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் கோவை மாவட்ட கிளையின் ஆலோசனைக்கூட்டத்தில், 5-ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் நடிகர் ரஜினி குறித்து உழைப்பால் உயர்ந்தவர் என்று படம் அச்சிடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. ரஜினி நல்ல மனிதர் என்றாலும் அவரால் தமிழ் சமூகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை மேலும் அவரால்தான் தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்பது வரலாறு.
அவர் நடிப்பில் சிவாஜியை போல மேதையும் கிடையாது. ஒவ்வொரு படத்திற்கு அவர் வாங்கும் ஊதியத்தை வெளியே சொல்வதுமில்லை அவரைப்பற்றி சொல்ல இன்னும் நிறைய குறைகள் இருக்கிறது அதனால் தமிழக மாணவர்கள் தவறான பாடத்தை படிக்கும் நிலை ஏற்படும் எனவே ரஜினி குறித்த பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் வழக்கு போடும் நிலை உருவாகும் என எச்சரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.



















