சினிமா
வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?
மரகத நாணயம் படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்த தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் பவர் இருக்கும் சூப்பர் ஹீரோ படமாக வீரன் படம் வெளியாகி உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள வீரானூர் கிராமத்தில் வசிக்கும் குமரன் சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென இடி ஒன்று அவன் மீது விழுகிறது.
பொதுவாக இடி விழுந்தால் ஆளே காலியாகி விடுவார்கள். ஆனால், சூப்பர் ஹீரோ படங்களில் லாஜிக் எல்லாம் மீறிய மேஜிக் தானே கதை என்பது போல இடி தாக்கிய சிறுவன் குமரனுக்கு மின்னல் சக்தி கிடைக்கிறது.
ஆனால், கொஞ்சம் லாஜிக் வேண்டுமே என்பதற்காக அவர் சுயநினைவை இழக்க குமரனின் அக்கா அவரை வீரானூரில் இருந்து மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார்.
சிங்கப்பூரில் தனக்கு அதீத சக்திகள் இருப்பதை தெரிந்து கொள்ளும் குமரன் 14 ஆண்டுகளாக அதை பெரிதாக பயன்படுத்தி அங்கேயே சூப்பர் ஹீரோ ஆகி விடாமல், 14 ஆண்டுகள் கழித்து தனது வீரானூர் கிராமத்தையே வில்லன் வினய் அழிக்க வருவதை தெரிந்துக் கொண்டு அவனுக்கு எதிராக போராட கிராமத்து எல்லைச் சாமி வீரனாக மாறி ஊர் மக்களுக்காக போராடும் கதை தான் இந்த வீரன் திரைப்படம்.
ஆனால், அந்த கார்ப்பரேட்டு அரைவேக்காடு சயின்டிஸ்ட்டாக வரும் நடிகர் வினய்யின் வெத்து வேட்டு கதாபாத்திரம் மொத்த படத்தையும் எழுந்து நிற்கவே முடியாத படி வீழ்த்தி விடுகிறது.
அடுத்தவன் மூளையை படிக்கத் தெரிந்தும், கட்டுப்படுத்த தெரிந்த சூப்பர் ஹீரோ ஏன் 2 மணி நேரம் 40 நிமிடம் வில்லன் அவரை யார் என தேடும் படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார் என்பது தான் முனிஷ்காந்த் – காளி வெங்கட் செய்த காமெடியை விட பெரிய காமெடியாக உள்ளது.
ஹீரோயின் கதாபாத்திரம், வலுவில்லாத வில்லன், டிராமா சூப்பர் ஹீரோ என சுவாரஸ்யமாக ஏதாவது இருக்குமா என படத்தில் தேடி தேடி பார்க்க வைத்து விட்டார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன்.
குழந்தைகளையாவது இந்த வீரன் கவர்வானா என்று பார்த்தால் அடுத்த வாரம் பள்ளிகளும் திறக்கப்படுகின்றது. வீரானூர் மக்களை வீரன் காப்பாற்றுவது இருக்கட்டும் இந்த வீரனை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பது தான் ஹைலைட்டே!
வீரன் – வீண்!
ரேட்டிங் – 2/5.