சினிமா செய்திகள்
‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்டு எதிர்வினை பரப்பி இருக்கிறார்கள் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்து இருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியான போதே இதன் கதைக்களத்திற்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.
இப்போது, ‘பகாசூரன்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கிறது. இதில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படத்திற்கு இருப்பதாக இயக்குநர் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அவர் பகிர்ந்திருப்பதாவது, “திரையரங்குகளில் நிறைய பெரியவர்கள் தான் சென்று பார்த்தீர்கள்.
இளையோர் யாரும் சென்று பார்க்கவில்லை. அதற்குக் காரணம் திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள். படம் குறித்து தவறான விமர்சனங்கள் பரவின. அமேசான் ப்ரைமில் வந்த பிறகு இன்று பலரும் படத்தை கொண்டாடுகிறார்கள். இது நாங்கள் எதிர்பார்த்ததுதான்.
இந்தப் படம் உங்களுக்கு பொறுமையாக செல்லலாம்.பிடிக்காத விஷயங்கள் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி தேவையான கன்டென்ட் இந்தப் படம். அண்மையில் சர்ச் பாஸ்டர் ஒருவர் பிரச்சினையில் சிக்கினார். சென்னையில் கல்லூரியில் பெண் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டடது என பல பிரச்சினைகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் படம் ஒரு விழிப்புணர்வு சார்ந்தது. குடும்பமாக சேர்ந்து இந்தப் படத்தைப் பார்க்கும்போது, பிரச்சினைகளை பேசி தீர்த்துகொள்ள முடியும். அவார்டுக்காக இந்தப் படம் எடுக்கவில்லை. திரௌபதி போல சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த எடுத்த படம் இது” என்று அதில் பேசி இருக்கிறார்.