தமிழ்நாடு
சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் (ஏப்ரல் 1) சுங்கக் கட்டணம் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை எவ்வகையிலும் மேம்படுத்தாமல், ஆண்டுக்கு ஆண்டு சுங்கக் கட்டணத்தை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் சுங்கக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சுங்கக் கட்டணம் உயர்வு
இந்தியாவின் உள்ள சுங்கச் சாவடிகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், 10 சதவிகிதத்திற்கும் மேல் தமிழ்நாட்டில் தான் உள்ளது. தமிழ்நாட்டில் 6606 கி.மீ அளவில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 5134 கி.மீ சாலைகளுக்கு, அதாவது 77% சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தேசிய சராசரியான 20% விடவும் 4 மடங்கு அதிகமாகும்.
இன்று அதிகரிக்கப்பட்ட கட்டண உயர்வுடன் சேர்த்தால், மகிழுந்தில் பயணிக்க ஒரு கி.மீ.-க்கு ரூ.1.52 சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகமாகும். சுங்கக் கட்டண உயர்வின் காரணத்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து அனைத்துத் தரப்பு பொதுமக்களும் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
60 கிமீக்கு ஒரே சுங்கச்சாவடி, தமிழ்நாட்டில் 9 சுங்கச் சாவடிகளில் 31.03.2023 ஆம் தேதியுடன் சுங்கக் கட்டணம் 40% குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த நிலையில், இவை எதுவும் இன்னமும் செயலுக்கு வரவில்லை; ஆனால், கட்டணம் மட்டும் உயருகிறது. இது எந்த விதத்தில் நியாயம்?
சுங்கச் சாவடி தொடர்பான சீர்த்திருத்தங்களைச் செய்யாமல், சாலைகளை மேம்படுத்தாமல் கட்டணங்களை மட்டும் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முழுவதிலும் இன்று முதல் (ஏப்ரல் 1) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வினை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.